INDIAN 7

Tamil News & polling

தமிழகத்தில் குரங்கு அம்மை பரவலா?

18 ஆகஸ்ட் 2024 11:51 AM | views : 68
Nature

குரங்கு அம்மை பாதிப்பு குறித்த தகவல்கள் இப்போது உலகெங்கும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், இது தொடர்பாகச் சுகாதாரத் துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் சில முக்கிய கருத்துகளைத் தெரிவித்துள்ளார். தமிழ்நாட்டில் இருக்கும் அனைத்து விமான நிலையங்களிலும் குரங்கு அம்மை பாதிப்புடன் வருவோரைக் கண்காணிக்கத் தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.


இப்போது உலகெங்கும் குரங்கு அம்மை எனப்படும் மங்கி பாக்ஸ் பாதிப்பு தான் பேசுபொருள் ஆகி உள்ளது. கொரோனாவை போல எங்கே இதுவும் ஒரு மோசமான பெருந்தொற்றை ஏற்படுத்துமோ என்று பலரும் அஞ்சுகின்றனர்.



இதற்கிடையே இது தொடர்பாகத் தமிழ்நாடு அரசின் சுகாதாரத் துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் சில முக்கிய தகவல்களைத் தெரிவித்துள்ளார். மேலும், தமிழகத்தில் இது தொடர்பாக எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகளையும் அவர் விளக்கினார்.

அமைச்சர் மா. சுப்பிரமணியன்: இது தொடர்பாக அவர் மேலும் கூறுகையில், "இது கடந்த 3 நாட்களுக்கு முன்பு உலக சுகாதார அமைப்பின் இயக்குநர் டெட்ரோஸ் அதானோம் குரங்கு அம்மை பாதிப்பைச் சர்வதேச சுகாதார நெருக்கடி என்று அறிவித்தார். உலகின் பல நாடுகளில் இந்த குரங்கு அம்மை பாதிப்பு கண்டறியப்பட்டு வருகிறது.

நேற்று முன்தினம் மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் ஜேபி நட்டாவும் இது குறித்து ஆலோசனைக் கூட்டத்தை நடத்தினார். அதில் இந்தியாவில் குரங்கு அம்மை பாதிப்பு எதுவும் இல்லை என்று நட்டா கூறியிருந்தார்.

குரங்கு அம்மை இல்லை: தமிழ்நாட்டிலும் யாருக்கும் குரங்கு அம்மை பாதிப்பு இல்லை. ஆனால் தமிழ்நாட்டில் இருக்கும் சர்வதேச விமான நிலையங்களில் கண்காணிப்பு பணிகளைத் தொடங்கியுள்ளோம். சென்னை, கோவை, மதுரை, திருச்சி ஆகிய விமான நிலையங்களில் வெளிநாடுகளில் இருந்து வருவோரைக் கண்காணித்து வருகிறோம். அவர்கள் உடலில் குரங்கு அம்மைக்குரிய அறிகுறிகள் இருக்கிறதா என்பதை ஆய்வு செய்கிறோம். இதற்காக அங்கே சுகாதார பணியாளர்கள் பணியமர்த்தப்பட்டுள்ளனர்.

இதுபோன்ற அறிகுறிகள் இருந்தால் அவர்கள் உடனடியாக மருத்துவமனையில் சேர்க்கப்படுவார்கள். இதற்குத் தேவையான நடவடிக்கைகளை எடுத்துள்ளோம். நாளை அல்லது நாளை மறுநாள் சென்னை விமான நிலையத்திற்கு நானே நேரடியாகச் சென்று ஆய்வுப் பணிகளைச் செய்ய உள்ளேன். இது குறித்த ஆலோசனை பலகைகளும் விமான நிலையங்களில் வைக்கப்பட்டுள்ளன" என்றார்.

மங்கி பாக்ஸ் நோயின் ஒரு வகை வைரஸ் இப்போது உலகின் பல நாடுகளில் பரவ தொடங்கியுள்ளது. மங்கி பாக்ஸ் திரிபை கிளேட் 1 என்ற வகை தான் இப்போது பரவி வருகிறது. இந்த வகை மங்கி பாக்ஸ் எப்போதும் ஆப்பிரிக்க நாட்டிற்குள் மட்டுமே பரவும். ஆனால் இது முதல்முறையாக ஆப்பிரிக்காவுக்கு வெளியேயும் பரவி இருக்கிறது. சுவீடன் நாட்டில் ஒருவருக்கு இந்த வகை மங்கி பாக்ஸ் பாதிப்பு கண்டறியப்பட்டது. அதேபோல பாகிஸ்தான் நாட்டிலும் சமீபத்தில் 3 பேருக்கு இந்த மங்கி பாக்ஸ் உறுதியானது.

இது தான் சர்வதேச அளவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தோலில் ஏற்படும் வலி, புண்களில் இருந்து திரவம் வெளியேறுவது உள்ளிட்டவை மங்கி பாக்ஸின் அறிகுறிகளாக உள்ளன. பெரும்பாலான நேரங்களில் மங்கி பாக்ஸ் லேசான பாதிப்பையே ஏற்படுத்தும் என்றாலும் சில நேரங்களில் இது உயிரிழப்பையும் ஏற்படுத்தும் அபாயம் இருக்கிறது.

Like
1
    Dislike
0



WhatsApp Share JOIN IN WHATSAPP WhatsApp Share




Whatsaap Channel


உங்கள் கருத்து

சமீபத்திய செய்திகள்

பிரபலமான செய்திகள்