மதுசூதனன் காலமானார்: அதிமுகவினர் அதிர்ச்சி!
Views : 1765
அதிமுக அவைத் தலைவர் மதுசூதனன் சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சற்று முன் காலமானார். அவருக்கு வயது 81. மதுசூதனன் உடல்நலக் குறைவு காரணமாக சென்னை ஆயிரம் விளக்கு பதியில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சைக்காக கடந்த மாதம் 20 ஆம் தேதி அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.
மதுசூதனன் உடல்நிலை மிகவும் கவலைக்கிடமாக உள்ளதாக இன்று மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்திருந்தது. இதனால் அதிமுக மாவட்ட செயலாளர்கள் வெங்கடேஷ் பாபு, பாலகங்கா, ராஜேஷ் உள்ளிட்டோர் அப்பல்லோ மருத்துவமனைக்கு வருகை தந்தனர். மருத்துவர்கள் தொடர் சிகிச்சை அளித்த போதும் சிகிச்சை பலனின்றி அவர் காலமானார்.
தீவிர எம்ஜிஆர் விசுவாசியான மதுசூதனன் 1991ஆம் ஆண்டு சட்டமன்றத்தேர்தலில் ஆர்.கே.நகர் தொகுதியில் போட்டியிட்டு வெற்றிபெற்றது மட்டுமல்லாமல், ஜெயலலிதா கேபினட்டில் கைத்தறி மற்றும் ஜவுளித் துறை அமைச்சராக பதவி வகித்தார்.
அதிமுகவின் முன்னாள் செய்தித்தொடர்பாளராகவும் மதுசூதனன் பொறுப்பு வகித்துள்ளார். 2010ஆம் ஆண்டு அதிமுகவின் அவைத்தலைவராக பொறுப்புக்கு வந்தார். தனது அரசியல் பயணம் முழுக்க மாவட்ட செயலாளர் முதல் அவைத் தலைவர் வரை அதிமுகவில் பல்வேறு பொறுப்புகளில் இருந்த பெருமை மதுசூதனனுக்கு உண்டு.
ஜெயலலிதா மறைவுக்கு பிறகு அதிமுக இரண்டு அணிகளாக பிரிந்தபோது, ஓ.பன்னீர்செல்வம் தலைமையிலான அணியில் மதுசூதனன் இணைந்தார். அதிமுக ஒருங்கிணைக்கப்பட்ட பிறகு கட்சியின் அவைத்தலைவர் பொறுப்புக்கு மதுசூதனன் மீண்டும் வந்தார்.
JOIN IN TELEGRAM