சுதந்திர இந்தியாவின் முதல் பிரதமர் சுபாஷ் சந்திரபோஸ்..! - கங்கனா ரனாவத்
Views : 721
இமாச்சல பிரதேசத்தின் மண்டி தொகுதியில் பா.ஜ.க சார்பில் நடிகை கங்கான ரனாவத் தேர்தலை எதிர்கொள்கிறார். அவர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டதிலிருந்து காங்கிரஸ் கட்சியைக் கடுமையாக விமர்சித்து வருகிறார். சமீபத்தில் பா.ஜ.க கூட்டத்தில் பேசிய அவர்,``பா.ஜ.க மீதான என் அதீத விருப்பத்தைப் பார்த்து, மற்ற கட்சிகள் என்னைப் பயமுறுத்தத் தொடங்கினர். என் வீட்டைக் கூட சேதப்படுத்தினர்.
வரவிருக்கும் தேர்தல் ஒரு தர்ம யுத்தம். மலையகப் பெண்கள் என்னைத் தேர்ந்தெடுத்து பிரதமர் மோடியின் கரங்களை வலுப்படுத்துவதன் மூலம் தகுந்த பதிலைக் கொடுப்பார்கள். மக்களுக்குச் சேவை செய்யவே அரசியலுக்கு வந்தேன். நான் ஏற்கனவே சினிமா துறையில் வெற்றி பெற்றுள்ளேன், அரசியலிலும் வெற்றி பெறுவேன்" எனத் தெரிவித்தார்.
இந்த நிலையில், தேர்தலை முன்னிட்டு அவர் தொடர்ந்து தனியார் செய்தி நிறுவனங்களுக்குப் பேட்டியளித்து வருகிறார். சமீபத்தில் டைம்ஸ் நவ் செய்தி நிறுவனத்துக்குப் பேட்டியளித்தபோது,`சுதந்திர இந்தியாவின் முதல் பிரதமர் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் எங்கே போனார்....?" எனக் கேள்வி எழுப்பினார். அந்த வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாகப் பகிரப்பட்டு வருகிறது. இந்த வீடியோவை காங்கிரஸ் தலைவர் பி.வி ஸ்ரீனிவாஸ், ஆம் ஆத்மி மாநிலங்களவை எம்.பி ஸ்வாதி மாலிவால் மற்றும் பலர் சமூக வலைதளங்களில் பகிர்ந்திருக்கின்றனர்.
டெல்லி மகளிர் ஆணையத்தின் முன்னாள் தலைவரும் ஆம் ஆத்மி கட்சியின் ராஜ்யசபா எம்பியுமான ஸ்வாதி மாலிவால் வீடியோவைப் பகிர்ந்து,``படித்த மற்றும் விவேகமானவர்களுக்கு வாக்களியுங்கள்" எனப் பதிவிட்டிருந்தார். அந்த வீடியோவை சமூக வலைத்தளங்களில் பலரும் விமர்சித்து வருகின்றனர். நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ், இந்தியாவின் சுதந்திரப் போராட்டத்தில் ஒரு முக்கிய தலைவர். இந்தியத் தேசிய காங்கிரஸின் தலைவராக பணியாற்றி, பின்னர் பார்வர்ட் பிளாக்கை உருவாக்கினார்.
இந்தியாவின் சுதந்திர இயக்கத்தில் அவர் முக்கிய பங்கு வகித்தாலும், 1947 இல் இந்தியா சுதந்திரம் பெற்ற பிறகு அவர் பிரதமர் பதவியை வகிக்கவில்லை. 1947-ம் ஆண்டு ஆங்கிலேயர் ஆட்சியிலிருந்து சுதந்திரம் பெற்ற பிறகு இந்தியாவின் முதல் பிரதமர் ஜவஹர்லால் நேரு. அவரே மே 27, 1964 வரையில் இறக்கும் வரை பிரதமராக இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
JOIN IN TELEGRAM