ரூ.4 கோடி பணம் பறிமுதல் விவகாரம்: பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரனுக்கு சம்மன்
Views : 145
சென்னை எழும்பூரில் இருந்து கடந்த 6-ந்தேதி புறப்பட்ட நெல்லை எக்ஸ்பிரஸ் ரெயிலில் ரூ.4 கோடி பணம் தேர்தல் பறக்கும் படையினரால் பறிமுதல் செய்யப்பட்டது. பணத்தை கொண்டுசென்ற 3 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் நடத்திய விசாரணையில், நெல்லை பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரனுக்காக பணத்தை கொண்டுசென்றதாக வாக்குமூலம் அளித்தனர்.
இது தொடர்பாக போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.இந்த நிலையில், கைப்பற்றப்பட்ட ஆவணங்களை அடிப்படையாக வைத்து பாஜக தொழில்துறை மாநில துணைத்தலைவர் கோவர்த்தனனின் உணவகத்தில் அதிகாரிகள் சோதனை நடத்தினர். இந்த சோதனையில் ரூ.1.10 லட்சம் பணம் கைப்பற்றப்பட்டது. இதையடுத்து பணம் கைப்பற்றப்பட்ட சம்பவத்தில் இவருக்கும் தொடர்பு உள்ளதா என விசாரிப்பதற்காக அவருக்கு தாம்பரம் போலீசார் சம்மன் அனுப்பியுள்ளனர்.
இந்நிலையில், நெல்லை எக்ஸ்பிரஸ் ரெயிலில் ரூ.4 கோடி பணம் பறிமுதல் செய்யப்பட்டது தொடர்பாக நெல்லை பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரனிடம் விசாரிக்க முடிவு செய்து தாம்பரம் போலீசா சம்மன் அனுப்பியுள்ளனர். நேரில் வந்து ஆஜராகி இது தொடர்பாக விளக்கம் அளிக்க வேண்டும் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. முன்னதாக இந்த பணத்துக்கும் தனக்கும் சம்பந்தமில்லை என நயினார் நாகேந்திரன் தெரிவித்து இருந்தது குறிப்பிடத்தக்கது.
JOIN IN TELEGRAM