இயற்கைக்கு மாறான பாலியல் உறவென்பது, பாலியல் வன்கொடுமை அல்ல - ம.பி உயர்நீதிமன்றம்
Views : 329
மத்தியப் பிரதேச உயர்நீதிமன்றம் “மனைவியுடன் ஆண் கொள்ளும் இயற்கைக்கு மாறான பாலியல் உறவென்பது, பாலியல் வன்கொடுமை அல்ல” என்ற தீர்ப்பை வழங்கியுள்ளது. இது திருமண உறவில் நடக்கும் பாலியல் வன்கொடுமைகள் குறித்து மீண்டுமொருமுறை அனைவரையும் பேசவைத்துள்ளது.
தன் தீர்ப்பில் நீதிமன்றம், ‘இந்திய அரசமைப்புச் சட்டத்தின்கீழ் திருமண உறவில் நடக்கும் இத்தகைய விஷயங்கள், பாலியல் வன்கொடுமை குற்றமல்ல. ஆகவே திருமணம் செய்து கொண்ட இருவர் பாலியல் உறவுகொள்ள பெண்ணின் சம்மதம் முக்கியம் என்ற கருத்து பொருளற்றதாகிறது’ என குறிப்பிட்டுள்ளது.
தேவகவுடா பேரன் பிரஜ்வல் ரேவண்ணாவின் பாலியல் வீடியோ விவாகரம்; பாஜவுக்கு பாதிப்பை ஏற்படுத்துமா?
உச்சநீதிமன்றம், பிற உயர்நீதிமன்றத்தில் பல தீர்ப்புகளை சுட்டிக்காட்டிய ம.பி உயர்நீதிமன்றம், ஐபிசி 375-ன் கீழ் பாலியல் வன்கொடுமை என்பது என்ன என்ற விளக்கத்தையும் சுட்டிக்காட்டி இருக்கிறது.
அதன்படி நீதிபதி ஜி.எஸ்.அல்ஹூவாலியா தன் தீர்ப்பில், “தன் மனைவியுடன் குறிப்பிட்ட பாலியல் உறவில் இருக்கும் ஒரு கணவனின் செயல், பாலியல் வன்கொடுமையின் கீழ் வராது. அதில் மனைவிக்கு சம்மதம் இல்லையென்றாலும், அது வன்கொடுமையில் வராது. ஒருவேளை அம்மனைவி 15 வயதுக்கு கீழ் இருந்தால் மட்டுமே அது குற்றமாக கருதப்படும்.
ஏனெனில் திருமணமான இருவரிடையே நடக்கும் பாலியல் செயல்பாடுகளின் சில கூறுகள், இந்திய சட்டத்தில் குற்றமென அங்கீகரிக்கப்படவில்லை. இதுபோன்ற சூழ்நிலைகளில் மனைவியின் சம்மதம் முக்கியமற்றது என்றே கருதப்படுகிறது. இருப்பினும் , ஐபிசி 376 பி-யின் படி, நீதிமன்ற உத்தரவு காரணமாகவோ அல்லது வேறு விதமாகவோ கணவன் மனைவி தனித்தனியாக வாழும்போது, தன் மனைவியுடன் பாலியல் உறவு கொள்வது வன்கொடுமையாக கருதப்படும்
IPC பிரிவு 377ன் கீழ், சட்டப்பூர்வமாகத் திருமணம் செய்துகொண்ட மனைவியுடன் கணவன் இயற்கைக்கு மாறான உடலுறவு கொள்வது குற்றமாகாது” எனக் குறிப்பிட்டுள்ளார்.
இத்தீர்ப்பை வழங்கி சம்பந்தப்பட்ட பெண் தன் கணவன் மீது ‘இயற்கைக்கு மாறாக உறவு கொள்ளுதல் / பாலியல் வன்கொடுமை’ (ஐபிசி 377) மற்றும் மிரட்டல் (ஐபிசி 506) ஆகியவற்றின் கீழ் பதிந்த எஃப்.ஐ.ஆர்-ஐ தள்ளுபடி செய்தது நீதிமன்றம். மே 1 வழங்கப்பட்ட இத்தீர்ப்பின் முழு விவரம் நேற்றைய தினம் வெளியானதை அடுத்து, ‘Marital Rape’ எனப்படும் ‘திருமண உறவில் நிகழும் பாலியல் குற்றங்கள்’ பேசுபொருளாகி இருக்கிறது.
முன்னதாக சம்பந்தப்பட்ட அந்தப் பெண் மே 2019-ல் திருமணமாகி, பிப்ரவரி 2020-ல் கணவரை பிரிந்திருக்கிறார். தொடர்ந்து கணவன் மீதும் அவர் வீட்டை சேர்ந்தவர்கள் மீதும் வரதட்சணை கொடுமை வழக்கை பதிவு செய்திருக்கிறார். தொடர்ந்து ஜூலை 2022-ல் பாலியல் வன்கொடுமை தொடர்பான வழக்கை பதிவு செய்துள்ளார்.
JOIN IN TELEGRAM