கொரோனாவுக்கு நடிகர் ஆர்.என்.ஆர்.மனோகர் பலி!
Views : 1787
தமிழ் சினிமாவில் பிரபல நடிகரும் எழுத்தாளரும் இயக்குனருமான ஆர்.என்.ஆர் மனோகர் கொரோனா பெருந்தொற்றால் தன்னுடைய 61வது வயதில் இன்று உயிரிழந்தார். கொரோனா நோயால் பாதிக்கப்பட்டு கடந்த 20 நாட்களாக தனியார் மருத்துவமனை ஒன்றில் சிகிச்சை பெற்று வந்த இவர் சிகிச்சை பலனின்றி இன்று உயிரிழந்துள்ளார். மேலும் இவர் திமுக மாநிலங்களவை உறுப்பினர் என்.ஆர்.இளங்கோவின் சகோதரர் என்பது குறிப்பிடத்தக்கது.
கே.எஸ். ரவிக்குமாரின் துணை இயக்குனராக தன்னுடைய திரைப் பயணத்தை துவங்கிய மனோகர், பின்னர் கோலங்கள், புதுமைப்பித்தன், தென்னவன் போன்ற பல படங்களில் எழுத்தாளராகவும் துணை இயக்குனராகவும் பணியாற்றினார். தான் பணியாற்றும் படங்களில் சிறுசிறு வேடங்களில் நடிப்பதை வழக்கமாக கொண்டிருந்த மனோகருக்கு தென்னவன் படத்தில் விவேக்குடன் அவர் நடித்த நகைச்சுவை காட்சி அவருக்கு பெரும் புகழைப் பெற்றுத்தந்தது.
அதன்பின் நகுல், சுனைனா நடித்த மாசிலாமணி படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமான மனோகர் வேலூர் மாவட்டம் என்ற படத்தையும் அதன்பின் இயக்கினார். இதற்கிடையே 2012ஆம் ஆண்டு இவருடைய மகன் ரஞ்சன், தனியார் பள்ளி ஒன்றில் நீச்சல் குளத்தில் பயிற்சி மேற்கொண்டபோது தண்ணீரில் மூழ்கி உயிரிழந்தது இவரை கடும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
அதன்பின் படம் இயக்குவதை நிறுத்திய மனோகர், என்னை அறிந்தால் மிருதன், டெடி என 50க்கும் மேற்பட்ட படங்களில் குணச்சித்திர வேடங்களில் பிஸி நடிகராக வலம் வந்தார். இந்த நிலையில் தற்போது அவர் கொரோனா நோயால் உயிரிழந்திருப்பது திரையுலகை பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
JOIN IN TELEGRAM