கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்ட 2 மாணவிகளுக்கு கண், கை, கால் செயல்திறன் பாதிப்பு!
Views : 1938
மாணவிகள் யோகலட்சுமி, பிரியதர்ஷினி ஆகியோருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தியதால் தான் பாதிப்பு ஏற்பட்டதா என மருத்துவர்கள் குழு அறிக்கை மூலம் தெரிய வரும் என்று மருத்துவத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் விளக்கமளித்துள்ளார்.
ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கர் அரசு பள்ளியில் கொரோனா தடுப்பூசி போட்டதால் மாணவி ஒருவருக்கு பார்வை குறைபாடு ஏற்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. மற்றொரு மாணவிக்கு கை, கால்கள் செயல்திறன் குறைந்துவிட்டதாக புகார் எழுந்துள்ளது.
ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கர் எள்ளு பாறை பகுதியை சேர்ந்த கூலித் தொழிலாளியின் மூத்த மகள் யோகலட்சுமி, சோளிங்கரில் உள்ள அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் 12ம் வகுப்பு படித்து வருகிறார். கடந்த ஜனவரி 4-ம் தேதி பள்ளி மாணவர்களுக்கு தடுப்பூசி செலுத்தும் திட்டத்தின்படி பள்ளியில் யோகலட்சுமிக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டது.
பள்ளி முடிந்து வீட்டிற்கு சென்ற யோகலட்சுமிக்கு திடீரென காய்ச்சல் ஏற்பட்டுள்ளது. வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் மேல் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட யோகலட்சுமிக்கு திடீரென பார்வை பறிபோனதாக கூறப்படுகிறது.
இதுகுறித்து மாவட்ட சுகாதார பணிகள் உதவி இயக்குனர் மணிமாறனிடம் கேட்டபோது, பள்ளி மாணவிக்கு தடுப்பூசி எடுத்துக்கொண்டதால் கண் பார்வை போக வாய்ப்பில்லை என்றார். பெற்றோரின் வம்சாவளி மரபணு மாற்றத்தின் காரணமாக மாணவிக்கு கண் பார்வைத்திறன் இழந்திருக்கலாம் என சான்று வழங்கப்பட்டு இருப்பதாகவும், அதனடிப்படையில் மேல்சிகிச்சைக்காக சென்னை எழும்பூர் குழந்தைகள் நல கண் பிரிவு மருத்துவமனைக்கு மாணவியை சிகிச்சைக்கு அனுப்பியதாகவும் தெரிவித்தார்.
இதனிடையே யோகலட்சுமி பயின்று வரும் பள்ளியில் தடுப்பூசி செலுத்திக் கொண்ட மற்றொரு மாணவி பிரியதர்ஷினி கடந்த 23-ஆம் தேதி காலை படுக்கையில் இருந்து எழுவதற்கு முற்பட்டபோது இரண்டு கால்களும் செயலிழந்து எழுந்து நிற்க முடியாமல் அவதிப்பட்டுள்ளார்.
அதைத்தொடர்ந்து வேலூர் சிஎம்சி மருத்துவமனையில் மாணவி பிரியதர்ஷினிக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மேலும், பிரியதர்ஷினியின் தந்தை பிரபு அப்பகுதி கவுன்சிலர் மற்றும் உறவினர்களுடன் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளிக்கு சென்று தலைமை ஆசிரியரிடம் உதவி கேட்டு முறையிட்டுள்ளர்.
மாணவிகள் யோகலட்சுமி, பிரியதர்ஷினி ஆகியோருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தியதால் தான் பாதிப்பு ஏற்பட்டதா என மருத்துவர்கள் குழு அறிக்கை மூலம் தெரிய வரும் என்று மருத்துவத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் விளக்கமளித்துள்ளார்.
கொரோனா தடுப்பூசி போட்ட பிறகு கண் பார்வை இழந்த மாணவிக்கு optic nueropathy என்ற நோயும், கை கால் செயலிழந்த மாணவிக்கு ”குலியன் பாரே சின்ட்ரோம்” (Guillain Barre syndrome) என்ற நோயும் தாக்கியிருப்பதாக மருத்துவர்கள் கண்டறிந்துள்ளனர்.
JOIN IN TELEGRAM