லெக்கின்ஸ் அணிந்து வந்த ஆசிரியை திட்டிய தலைமை ஆசிரியர்.. பூதாகரமான ஆடை விவகாரம்!
Views : 1917
கேரளாவில், பள்ளிக்கு லெக்கின்ஸ் சுடிதார் அணிந்து வந்த ஆசிரியையை அந்த பள்ளியின் தலைமை ஆசிரியை திட்டிய விவகாரம் பூதாகரமாகியுள்ளது. “நீ இப்படி ஆடை அணிவதால் தான் அவர்கள் அப்படி செய்கிறார்கள்” நீ ஏன் இந்த ஆடையை அணிகிறாய், உனக்கு வேறு ஆடையே கிடைக்கவில்லையா? இதுபோன்ற விமர்சனங்களை நாம் நாள்தோறும் கேட்டுக் கொண்டுதான் இருக்கிறோம்.
ஆனால், இதுபோன்ற ஒரு குற்றச்சாட்டுக்குத்தான் பதிலடி கொடுத்திருக்கிறார் கேரளாவைச் சேர்ந்த ஆசிரியை. கேரள மாநிலம், மலப்புரம் மாவட்டத்துக்கு உட்பட்ட அரசுப் பள்ளியில் இந்தி பாட ஆசிரியராக பணியாற்றி வந்தவர் சரிதா ரவீந்திரநாத். சுடிதார் மற்றும் லெக்கின்ஸ் அணிந்து பள்ளிக்கு சென்ற அவரை, தலைமை ஆசிரியை ரம்லாத் கடுமையாக சாடியிருக்கிறார்.
மேலும், நீ இப்படி ஆடை அணிவதால் தான், மாணவிகள் ஒழுங்கீனமாக நடந்து கொள்கிறார்கள் என்றும் பள்ளிக்கு லெக்கின்ஸ் அணிந்து வந்தது தவறு என்றும் கண்டித்திருக்கிறார். அனைவருக்கு மத்தியில் தன்னை தலைமை ஆசிரியை கண்டித்ததால் மனமுடைந்த போன ஆசிரியை சரிதா ரவீந்திரநாத், இது தொடர்பாக மாவட்ட கல்வி அதிகாரியிடம் புகார் அளித்தார். அதில், புடவை அணியும் ஆசிரியர்கள் நல்லவர்கள் என்றும், லெக்கின்ஸ் மற்றும் டாப்ஸ் அணிபவர்கள் கெட்டவர்கள் என்றும் நினைக்கிறார்களா என்றும் கேள்வி எழுப்பினார்.
புடவையை விட சுடிதார் பாதுகாப்பானது என தெரிவித்த ஆசிரியை சரிதா, கொரோனா பெருந்தொற்றுக்கு மத்தியில், பல்வேறு சிக்கலை சந்தித்து கொண்டு பள்ளிக்கு வந்து பாடம் நடத்தும் தங்களிடம், லெக்கின்ஸ் ஒரு பிரச்சனை என்று சொல்வது வெட்கக்கேடானது என்று கடுமையாக தெரிவித்துள்ளார்.
மேலும், பள்ளியில் ஆண் ஆசிரியர்கள் பலர் ஜீன்ஸ் அணிந்து வருகின்றனர். அவர்களின் உடைகளை எல்லாம் கேள்வி கேட்காமல் தன்னிடம் இப்படி நடந்து கொண்டது முறையா என்று சரிதா கேள்வி எழுப்பியுள்ளார். உடை தொடர்பாக ஆசிரியை தலைமை ஆசிரியை இடையேயான இந்த மோதல் கேரளா மாநிலத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
JOIN IN TELEGRAM