நிர்வாண சித்தர் என்று பிரபலப்படுத்தப்பட்ட மனநலம் பாதித்த முதியவர் மீட்பு
Views : 1878
10 ஆண்டுகளுக்கு முன் அரவக்குறிச்சி அருகே மலைக்கோவிலூர் பகுதிக்கு வந்த மனநலம் பாதித்த ஒருவர், யாராவது கொடுக்கும் உணவை சாப்பிட்டுக்கொண்டு தேசிய நெடுஞ்சாலையின் மீடியனில் அரளி செடி ஓரத்தில் படுத்து உறங்கிக்கொண்டு காலத்தை கழித்து வந்தார். திடீரென கடந்த சில மாதங்களுக்கு முன்னர், நாகம்பள்ளி பிரிவு சாலை ஓரத்தில் புறம்போக்கு நிலத்தில் ஒரு குடிசை போட்டு, முதியவரை அங்கு கொண்டுவந்து சிலர் விட்டுள்ளனர்.
அதன்பின்னர் உடல் முழுவதும் திருநீறு பூசப்பட்ட நிலையில் அந்த முதியவர் காணப்பட்டார். நிர்வாண சித்தர், தகர கொட்டாய் சித்தர், மலைக்கோவிலூர் சித்தர் என அவர் பற்றி தகவல் பரவ, பக்தர்கள் வருகை, உண்டியல் வசூல் என அந்த இடமே பரபரப்பானது.சில நாட்களுக்கு முன் இங்குவந்த சிலர், தலைகீழாக நடனம் ஆடி, பக்தி பாடல்கள் பாட, சித்தரை பற்றி அறியாமையில் இருந்துவிட்டோமே என இப்பகுதி மக்களையே நினைக்க வைத்துவிட்டனர்.
இந்நிலையில் மனநலம் பாதித்தவரை வைத்து சிலர் பண வசூலில் ஈடுபடுவதாகவும், அவரது உயிருக்கு ஆபத்து இருப்பதாகவும் மாவட்ட நிர்வாகம் மற்றும் காவல்துறைக்கு தன்னார்வலர்கள் புகாரை தட்டிவிட, மாவட்ட சிறப்பு வருவாய் அலுவலர், வட்டாட்சியர் மற்றும் சுகாதாரத்துறை அதிகாரிகள் தலைமையிலான குழுவினர் தகர கொட்டகைக்கு விரைந்தனர். அங்கு உடல்நலம், மனநலம் பாதித்த நிலையில் இருந்த முதியவரை மீட்டு கரூர் மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
அந்த இடத்தில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றிய காவல்துறையினர், சித்தர் மோகத்தில் இருந்த பொதுமக்களுக்கு அறிவுரை கூறி அனுப்பி வைத்தனர். கரூரில் தகர கொட்டாய் சித்தராக மாற்றப்பட்டவர் சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த சுப்பிரமணி என்பதும், அரசுப்பேருந்தில் டிக்கெட் பரிசோதகராக இருந்த இவர் மனநல பாதிப்பில் வீட்டை விட்டு வெளியேறியதும் தெரிய வந்துள்ளது.
JOIN IN TELEGRAM