சூர்ய குமார் இந்தியாவுக்கு மிக முக்கியமான ஆட்டக்காரர் - ஹர்திக் பாண்டியா புகழாரம்
Views : 1878
இலங்கைக்கும் சூரியகுமார் யாதவுக்கு இடையிலான போட்டியாக நேற்று நடந்த 3வது டி20 போட்டி மாறிவிட்டது என்று இந்திய அணியின் கேப்டன் ஹர்திக் பாண்டியா புகழாரம் சூட்டியுள்ளார். இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இலங்கை கிரிக்கெட் அணி, 3 போட்டிகள் கொண்ட 20 ஓவர் கிரிக்கெட் தொடரில் விளையாடி முடித்துள்ளது. முதல் இரண்டு போட்டிகளில் இந்தியா மற்றும் இலங்கை அணிகள் தலா ஒரு போட்டியில் வெற்றி பெற்று சமநிலையில் இருந்தன. இதனால் தொடரை வெல்லப்போவது யார் என்பதை தீர்மானிக்கும் இறுதிப் போட்டி நேற்று நடந்தது.
இதில் இந்திய அணி 91 ரன்கள் வித்தியாசத்தில் இமாலய வெற்றியை பதிவு செய்துள்ளது. இந்த போட்டியில் இந்திய அணியின் பேட்ஸ்மேன் சூர்யகுமார் யாதவ் 112 ரன்களை அதிரடியாக குவித்து அணியின் வெற்றிக்கு முக்கிய காரணமாக அமைந்தார். இந்நிலையில் சூர்ய குமாரை கேப்டன் ஹர்திக் பாண்டியா பாராட்டிப் பேசியுள்ளார். இதுதொடர்பாக ஹர்திக் பாண்டியா அளித்துள்ள பேட்டியில் கூறியிருப்பதாவது- மூன்றாவது டி20 போட்டி இலங்கைக்கும் சூர்ய குமாருக்கும் இடையிலான போட்டியாக மாறிவிட்டது. 20 ஓவர் மற்றும் ஒருநாள் போட்டிகளில் சூர்ய குமார் இந்தியாவுக்கு மிக முக்கியமான ஆட்டக்காரர் ஆவார்.
மிக கடினமான பந்துகளையும் அவர் எளிதாக அடித்து ஆடி ரன்களை சேர்த்தார். இது இந்திய அணியின் மற்ற பேட்ஸ்மேன்களுக்கும் உதவியாக அமைந்தது. ராகுல் திரிபாதி 16 பந்துகளில் 35 ரன்களை எடுத்தார். அவரது பேட்டிங் பாராட்டும்படியாக இருக்கிறது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.
நேற்றைய ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 20 ஒவர்கள் முடிவில், 5 விக்கெட்டுகளை இழந்து 228 ரன்களை குவித்தது.
தொடக்க வீரர்சுப்மன் கில் 46 ரன்களை எடுத்தார். சூர்ய குமார் யாதவ் 51 பந்துகளில் 112 ரன்களை குவித்தார். இதில் 9 சிக்சர்களும், 7 பவுண்டரிகளும் அடங்கும்.
229 ரன்களை சேஸ் செய்த இலங்கை அணி 16.4 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 137 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வி அடைந்தது.
இதையடுத்து இந்தியா – இலங்கை அணிகளுக்கு இடையிலான ஒருநாள் கிரிக்கெட் தொடர் வரும் செவ்வாயன்றுதொடங்குகிறது.
JOIN IN TELEGRAM