துணிவு - வாரிசு ரிலீசுக்கு முன்பே அக்கப் போர்!
Views : 1943
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களான விஜய் நடித்துள்ள வாரிசு திரைப்படமும் அஜித் நடித்த துணிவு திரைப்படமும் மிகுந்த எதிர்பார்ப்புகளுக்கு இடையே வரும் 11ம் தேதி அதிகாலை 5 மணி அளவில் வெளியாக உள்ளது. இந்நிலையில், தேனி மாவட்டத்தில் முழுவதும் அஜித் மற்றும் விஜய் ரசிகர்கள் தியேட்டர்களில் முன்பாக பேனர்கள், கட் அவுட்டுகள் வைத்து வருகின்றனர். தேனி மாவட்டம் போடிநாயக்கனூர் பகுதியில் உள்ள வெற்றி திரையரங்கில் 2 படமும் வெளியாக உள்ளது. போடிநாயக்கனூர் பகுதியில் உள்ள 3 திரையரங்கில் 2 திரையரங்கில் அஜித் மற்றும் விஜய் படங்கள் தனித்தனியே வெளியிடப்பட உள்ள நிலையில், வெற்றி திரையரங்கில் இரண்டு படங்களும் ஒரே நாளில் வெளியிடப்பட உள்ளதால் இதில் முதல் காட்சியாக எந்த திரைப்படம் வெளியிடுவது என்பதில் சர்ச்சை எழுந்துள்ளது.
இரு தரப்பு ரசிகர்களும் ஆன்லைனில் 11ம் தேதி காலை 5 மணி முதல் காட்சியை காண்பதற்காக துணிவு வாரிசு இரண்டு படங்களுக்குமே புக்கிங் செய்து வருகின்றனர். அஜித் மற்றும் விஜய் நடித்த 2 படங்களும் ஒரே நேரத்தில் வெளியாவதால் 11ம் தேதி எந்த படம் முதலில் வெளியாகும் என்பதில் போடி நகர் விஜய் மற்றும் அஜித் ரசிகர்கள் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில், அஜித் மற்றும் விஜய் ரசிகர்களுக்கிடையே மோதல் ஏற்படும் சூழல் தற்போது உருவாகியதால் போடி நகர் காவல் துறையினர் தலையிட்டு தியேட்டர் உரிமையாளர்களிடமும் இருதரப்பு ரசிகர்களிடமும் பேச்சுவார்த்தை நடத்தினர். ஒரே நேரத்தில் ஒரே திரையரங்கில் 2 படங்களும் வெளியிடப்பட்டால் ரசிகர்களுக்கிடையே வாக்குவாதம் ஏற்பட வாய்ப்பு உள்ள காரணத்தினாலும், ஒரு தியேட்டரில் இரண்டு படங்களும் வெளியிடப்பட்டால் சட்ட ஒழுங்கு பிரச்சனை ஏற்படும் என்பதன் அடிப்படையிலும் காவல்துறையினர் ஒரு படத்தை மட்டும் வெளியிட தியேட்டர் உரிமையாளர்களிடம் அறிவுறுத்தியுள்ளனர்.
இதன் காரணமாக எந்த படம் திரையிடப்படும் என்ற எதிர்பார்ப்பில் இரு தரப்பு ரசிகர்களும் பேனர் வைத்துக் கொண்டு தியேட்டரை முற்றுகையிட்டனர். பின்னர் காவல் துறையினர் பேச்சுவார்த்தை நடத்தி இருதரப்பு ரசிகர்களும் அங்கிருந்து கலைந்து செல்ல அறிவுறுத்தினர். இதனால் போடிநாயக்கனூர் பகுதியில் பரபரப்பான சூழ்நிலை காணப்பட்டு வருகிறது.
JOIN IN TELEGRAM