ஓபிஎஸ், இபிஎஸ்... இரட்டை இலை சின்னம் யாருக்கு கிடைக்க அதிக வாய்ப்பு!
Views : 1823
ஈரோடு கிழக்கு தொகுதியில் கடந்த தேர்தலில் போட்டியிட்ட தமாகா, இடைத்தேர்தலில் அதிமுகவே களம் காணும் என அறிவித்துவிட்டது. இதனை தொடரந்து தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது. இடைத் தேர்தலில் தங்கள் அணி போட்டியிடும் என அறிவித்துள்ளார் ஓபிஎஸ். பாஜகவை தங்கள் பக்கம் வைத்துக்கொள்ளும் முயற்சியாக, அக்கட்சி போட்டியிட விரும்பினால் ஆதரவு அளிக்கப்படும் என்றும் ஓபிஎஸ் கூறியுள்ளார்
ஒபிஎஸ்ஸின் இந்த அறிவிப்பால் இரட்டை இலை சின்னம் எந்த தரப்புக்கு சொந்தம் என்ற கேள்வி எழுந்துள்ளது. சின்னத்தை பொறுத்தவரை பெரும்பான்மை இருக்கும் பக்கத்துக்கு தான் ஒதுக்கப்படும் என்றும், எனவே எம்.எல்.ஏ-க்கள், எம்.பி.க்கள், பொதுக்குழு, செயற்குழு உறுப்பினர்களின் ஆதரவு அதிகமுள்ள எடப்பாடிக்கே கிடைக்கும் என திட்டவட்டமாக கூறுகிறது அத்தரப்பு. இரட்டை இலை சின்னம் யாருக்கு கிடைக்கிறதோ, அவருக்கே ஆதரவளிக்கப்படும் என கூட்டணி கட்சியினரும் தெரிவித்துள்ளனர்
இந்லையில், முறைகேடாக பொதுச் செயலாளர் ஆன எடப்பாடியின் பதவியை தேர்தல் ஆணையம் அங்கீகரிக்கவில்லை என்பதால், எடப்பாடி தரப்புக்கு சின்னம் கிடைக்க வாய்ப்பே இல்லை. எனவே ஒருங்கிணைப்பாளர் என்ற முறையில் சின்னத்தை வழங்க வேண்டும் என்று தேர்தல் ஆணையத்துக்கு கடிதம் அனுப்ப உள்ளதாக ஒபிஎஸ் தரப்பு கூறுகிறது. இரட்டை இலை சின்னம் முடக்கப்படும் வாய்ப்பு குறைவாகவே உள்ளதாக குறிப்பிடும் அரசியல் நோக்கர்கள், இரு தரப்பினரும் வேறு சின்னத்தில் போட்டியிட்டால் தான் மக்கள் ஆதரவு யாருக்கு உள்ளது என்ற விவரம் வெளியாகும் என கூறுகின்றனர்.
சின்னம் முடக்கப்பட்டு சுயேச்சைகளாக இடைத்தேர்தலில் களம் கண்டால், இது ஓபிஎஸ் தரப்புக்கே பின்னடைவை ஏற்படுத்தும் என மூத்த பத்திரிகையாளர்கள் கூறுகின்றனர்.
ஜூலை 11ஆம் தேதி நடைபெற்ற அதிமுக பொதுக்குழுவுக்கு எதிரான வழக்கில் வரும் 24ஆம் தேதி உச்ச நீதிமன்றத்தில் தீர்ப்பு வெளியாகும் என கூறப்படுகிறது. தீர்ப்புக்கு பிறகு தான் அதிமுகவில் நிலவும் குழப்பங்களுக்கு தெளிவான விடை கிடைக்கும்.
JOIN IN TELEGRAM