தமிழக இளைஞர்கள் இல்லாத சிஎஸ்கே அணியை தடை செய்ய வேண்டும் - பா.ம.க எம்.எல்.ஏ கோரிக்கை
Views : 1979
தமிழ்நாடு சார்பில் ஐபிஎல்லில் விளையாடும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் தமிழர்களே இல்லாததால், உடனடியாக இந்த அணியை தடை செய்ய வேண்டும் என்று சட்டப்பேரவையில் பாமக சட்டமன்ற உறுப்பினர் வெங்கடேஸ்வரன் பேசியுள்ளது சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. ஐபிஎல் கிரிக்கெட் வரலாற்றில் வெற்றிகரமான அணிகளில் ஒன்றாக இருந்து வரும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, இதுவரை நான்கு முறை கோப்பையை வென்றுள்ளது.
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டனாக எம்எஸ் தோனி இருக்கிறார். அவரைத் தவிர, ரவீந்திர ஜடேஜா, டெவோன் கான்வே, ருதுராஜ் கெய்க்வாட், அம்பதி ராயுடு, சுப்ரான்ஷு சேனாபதி, மொயின் அலி, ஷிவம் துபே, ராஜ்வர்தன் ஹங்கர்கேகர், டுவைன் பிரிட்டோரியஸ், மிட்செல் சான்ட்னர், தீபக் சாஹர், துஷார் தேஷ்பாண்டே, ஆகாஷ் சிங், சிமர்ஜேதானா, மதீஷா பத்திரன், மதீஷா பத்திரன், , மகேஷ் தீக்ஷனா, அஜிங்க்யா ரஹானே, பென் ஸ்டோக்ஸ், ஷேக் ரஷீத், நிஷாந்த் சிந்து, அஜய் மண்டல், பகத் வர்மா, சிசண்டா மகலா ஆகியோர் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் உள்ளனர்.
சிஎஸ்கே இதுவரை விளையாடிய 13 சீசன்களில் 9 முறை இறுதிப்போட்டிக்கும் 11 முறை பிளே-ஆப் சுற்றுக்கும் தகுதி பெற்றுள்ளது. அதில் நான்கு முறை ஐபிஎல் சாம்பியன் கோப்பையை வென்றது குறிப்பிடத்தக்கது.
அதிக சாம்பியன் பட்டம் வென்ற அணிகளின் பட்டியலில் இரண்டாவது அணியாகவும், அதிக முறை இறுதிப் போட்டிகளில் விளையாடிய அணியாகவும் சிஎஸ்கே அணி இருக்கிறது. ஆனால், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை தடை செய்ய வேண்டும் என்று சட்டப்பேரவையில் எம்.எல்.ஏ ஒருவர் பேசியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
பாமக சட்டமன்ற உறுப்பினர் வெங்கடேஸ்வரன் இன்று (ஏப்ரல் 11, 2023) தமிழக சட்டசபையில் பேசும்போது, “தமிழகத்தில் பல திறமையான இளம் வீரர்கள் இருக்கின்றனர். இருந்தும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் எவரும் எடுக்கப்படவில்லை. ஆனால் தமிழ்நாட்டுக்கான ஐபிஎல் அணி என்கிற ரீதியில் வெளியில் காட்டிக்கொண்டு வர்த்தகத்தில் பல கோடி ரூபாய்களில் லாபம் ஈட்டுகின்றது. இதனால் தமிழர்களுக்கு என்ன பலன்?’ என்று கேள்வி எழுப்பினார்.
தமிழக வீரர்களே இல்லாமல் தமிழ்நாட்டுக்கான அணி என்று சொல்லிக் கொள்ளும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை உடனடியாக தடை செய்ய வேண்டும்.” என்று பாமக சட்டமன்ற உறுப்பினர் வெங்கடேஸ்வரன் பேசியது பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது..
சட்டப்பேரவை விட்டு வெளியே வந்த பிறகு பேசிய அவர், “தமிழ்நாட்டில் பல திறமையான வீரர்கள் இருந்தும் எவருக்கும் வாய்ப்பு கொடுக்காத அணியை தமிழகத்திற்குள் இனியும் அனுமதிக்க முடியாது. தமிழகத்திற்கான அணி என்று சொல்லிக்கொண்டு தமிழ்நாட்டில் இருந்து ஒருவரையும் எடுக்கவில்லை என்றால் கேட்பதற்கு யாரும் இல்லை என்பது போல சிஎஸ்கே அணி நிர்வாகம் நடந்து கொள்கிறார்களா? எங்களது கோரிக்கைக்கு உரிய பதில் கிடைக்கும் வரை போராடுவோம்.” என்றும் பேசினார்.
இந்த ஐபிஎல் 2023 சீசனில் விளையாடிய மூன்று போட்டிகளில் இரண்டு வெற்றிகள் உடன் இருக்கும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, 4ஆவது லீக் போட்டியை வருகிற ஏப்ரல் 12ஆம் தேதி சேப்பாக்கம் மைதானத்தில் விளையாடுகிறது.
JOIN IN TELEGRAM