Tamil News & polling
ஐசிசி 2024 டி20 உலகக் கோப்பையில் ரோகித் சர்மா தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி செமி ஃபைனல் சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளது. இத்தொடரில் லீக் சுற்றில் அயர்லாந்து, பாகிஸ்தான், அமெரிக்காவை வீழ்த்திய இந்தியா சூப்பர் 8 சுற்றில் ஆப்கானிஸ்தான், வங்கதேசம், ஆஸ்திரேலியாவை தோற்கடித்தது. குறிப்பாக கடைசி சூப்பர் 8 போட்டியில் ஆஸ்திரேலியாவை 24 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா வீழ்த்தியது.
செயின் வின்சென்ட் நகரில் ஜூன் 24ஆம் தேதி நடைபெற்ற அந்தப் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்தியா ரோஹித் சர்மா 92 (41) ரன்கள் எடுத்த உதவியுடன் 206 ரன்களை இலக்காக நிர்ணயித்தது. ஆனால் அதை சேசிங் செய்த ஆஸ்திரேலியா முடிந்தளவுக்கு போராடியும் 20 ஓவரில் 181/7 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வியை சந்தித்தது. அதிகபட்சமாக டிராவிஸ் ஹெட் 76 ரன்கள் எடுத்த நிலையில் இந்தியா சார்பில் அதிகபட்சமாக அர்ஷ்தீப் சிங் 3 விக்கெட்டுகளை சாய்த்தார்.
சத்தமில்லாத சாதனை:
முன்னதாக இந்த தொடரில் வேகப்பந்து வீச்சு துறையில் ஜஸ்ப்ரித் பும்ரா அற்புதமாக செயல்பட்டு இந்தியாவின் வெற்றிகளில் பங்காற்றி வருவதை அனைவரும் அறிவோம். அதே போல இடது கை வேகப்பந்து வீச்சாளராக விளையாடும் அர்ஷ்தீப் சிங்கும் அவருக்கு நிகராக அசத்தி வருகிறார். சொல்லப்போனால் 11 விக்கெட்டுகளை எடுத்துள்ள பும்ராவை விட இதுவரை அர்ஷ்தீப் 6 போட்டிகளில் 15 விக்கெட்டுகளை எடுத்துள்ளார்.
இதன் வாயிலாக ஒரு டி20 உலகக் கோப்பையில் அதிக விக்கெட்டுகள் எடுத்த இந்திய வீரர் என்ற வரலாற்றுச் சாதனையையும் அவர் படைத்துள்ளார். இதற்கு முன் கடந்த 2007 டி20 உலகக் கோப்பையில் ஆர்பி சிங் 12 விக்கெட்டுகள் எடுத்ததே முந்தைய சாதனையாகும். அந்தப் பட்டியலில் தற்போது 3வது இடத்தில் 2014இல் 11 விக்கெட்டுகள் எடுத்த ரவிச்சந்திரன் அஸ்வினும் மற்றும் 2024இல் 11* விக்கெட்டுகள் எடுத்துள்ள ஜஸ்ப்ரித் பும்ராவும் உள்ளனர்.
இது போக ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற 2022 டி20 உலகக் கோப்பையிலும் அர்ஷ்தீப் சிங் 10 விக்கெட்டுகள் எடுத்திருந்தார். அதன் வாயிலாக 2 வெவ்வேறு டி20 உலகக் கோப்பைகளில் 10 விக்கெட்டுகளை எடுத்த முதல் இந்திய வீரர் என்ற சாதனையும் அவர் படைத்துள்ளார். அந்த வகையில் சத்தமின்றி தமக்கு கொடுக்கப்பட்ட வேலையில் அர்ஷ்தீப் சிங் சிறப்பாக செயல்பட்டு சாதனைகளையும் படைத்து வருகிறார்.
இதைத் தொடர்ந்து இந்தியா செமி ஃபைனல் சுற்றில் ஜூன் 27ஆம் தேதி இரவு 8 மணிக்கு கயானா நகரில் நடைபெறும் 2வது போட்டியில் இங்கிலாந்து அணியை எதிர்கொள்கிறது. அந்தப் போட்டியிலும் வெற்றி பெற்று இந்தியா ஃபைனலுக்கு தகுதி பெறுமா என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் ஏற்பட்டுள்ளது.

விஜய் Vijay DMK சென்னை Chennai திமுக TVK தவெக அண்ணாமலை Annamalai அதிமுக பாஜக BJP கனமழை தமிழக வெற்றிக் கழகம் Tamil Nadu எடப்பாடி பழனிசாமி MK Stalin TTV Dhinakaran AIADMK ADMK திருமாவளவன் மு.க.ஸ்டாலின் Anbumani Ramadoss AMMK அன்புமணி ராமதாஸ் தமிழ்நாடு சீமான் டிடிவி தினகரன் Thirumavalavan PMK முக ஸ்டாலின் செங்கோட்டையன் Seeman Sengottaiyan பாமக வடகிழக்கு பருவமழை Congress Edappadi Palaniswami சட்டசபை தேர்தல் Tamilaga Vettri Kazhagam