விருதுநகர் மாவட்டம் சிவகாசி பகுதியைச் சேர்ந்த கல்லூரி மாணவி கிருஷ்ணவேணி மற்றும் கல்லூரி மாணவன் பழனிசாமி ஆகிய இருவரும் காதலித்து கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு திருமணம் செய்து கொண்டனர். இவர்கள் இருவரும் இருவேறு சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள் என்பதால் இன்று பெண்ணின் பெற்றோர்களான ஜெயக்குமார் - அய்யம்மாள் மற்றும் உறவினர்கள் சிவா, மணிகண்டன், வேல்முருகன் ஆகிய ஐந்து பேரும் பெண் இருந்த இடத்திற்குச் சென்றுள்ளனர்.
இதையடுத்து தாயில்பட்டி பகுதிக்குச் சென்ற அவர்கள், சொந்த பந்தங்கள் கூடி பெரிய அளவில் திருமணம் செய்து வைக்க வேண்டும் என கூறி காரில் ஏறச் சொல்லி வற்புறுத்தி உள்ளனர். ஆனால், அந்தப் பெண் ஏற மறுக்கவே வலுக்கட்டாயமாக புதுமண ஜோடிகளை காரில் ஏற்றிக் கொண்டு சென்றுள்ளனர். அப்போது அங்கு இருந்தவர்கள் வெம்பக்கோட்டை காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். இதைத்தொடர்ந்து அந்த காரை தாயில்பட்டி பகுதி மக்களும், காவல்துறையினரும் சினிமா பாணியில் துரத்திச் சென்றுள்ளனர்.
முன்னதாக தென்காசி மாவட்ட காவல்துறை கட்டுப்பாட்டு அறையிலிருந்து கிடைத்த தகவலை அடுத்து திருவேங்கடம் மற்றும் குருவிகுளம் காவல்துறையினர் தயார் நிலையில் இருந்தனர். அப்போது குருவிகுளம் நோக்கி வந்த காரை காவல் உதவி ஆய்வாளர் ராஜேஷ்குமார் தலைமையிலான காவல்துறையினர் தடுத்து நிறுத்தினர். அப்போது காரில் புதுமணத் தம்பதியினர் இல்லாததைக் கண்டு அதிர்ச்சியடைந்த காவல்துறையினர், காரில் இருந்தவர்களிடம் விசாரித்தனர்.
அப்போது காவல்துறையினர் இருப்பதை அறிந்து புதுமணத் தம்பதியினரை இறக்கிவிட்டு வந்ததாக கூறியுள்ளனர். இதையடுத்து காரில் இருந்த 5 பேரும் வெம்பகோட்டை காவல் துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டனர்.
இதனிடையே புதுமண ஜோடிகளை மீட்ட பெரியவர் ஒருவர் அவர்களை வெம்பகோட்டை காவல் நிலையத்தில் ஒப்படைத்தார். இதைத் தொடர்ந்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும் இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள
E7 Tamil Whatsapp Channel-ஐ Follow பண்ணுங்க
Whatsapp Channel Link:-
https://whatsapp.com/channel/0029Va9LGy4FXUuiUvhKXV1S