அவதூறு கருத்து: வடிவேலு தொடர்ந்த வழக்கில் சிங்கமுத்து பதிலளிக்க உத்தரவு!

யூடியுப் சேனல்களில் தனக்கு எதிராக அவதூறு கருத்துகளைக் கூறிய நடிகா் சிங்கமுத்து ரூ. 5 கோடி மான நஷ்டஈடு தரக் கோரி நடிகர் வடிவேலு தொடர்ந்த அவதூறு வழக்கில், சிங்கமுத்து பதில் மனு தாக்கல் செய்ய சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

நகைச்சுவை நடிகரான சிங்கமுத்துவும், வடிவேலுவும் கடந்த 2000-ஆம் ஆண்டு முதல் ஒன்றாக நடித்து வந்தனர். வடிவேலு குறித்து சிங்கமுத்து தொடந்து விமர்சித்து வந்ததால் 2015-க்கு பிறகு அவர்கள் இருவரும் ஒன்றாக சேர்ந்து நடிக்கவில்லை


இந்த நிலையில், கடந்த பிப்ரவரி, மாா்ச் மாதங்களில் பல்வேறு யூடியூப் சேனல்களில் சிங்கமுத்து அளித்த பேட்டியில், வடிவேலு குறித்து மிகவும் தரக்குறைவாகப் பேசியதாக நடிகர் வடிவேலு சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து இருந்தார்..


மேலும், ரூ. 5 கோடி மான நஷ்ட ஈடாக வழங்க சிங்கமுத்துவுக்கு உத்தரவிட வேண்டும் என்றும். வடிவேலு குறித்து அவதூறாகப் பேச சிங்கமுத்துவுக்கு தடை விதிக்க வேண்டும் எனவும் அந்த மனுவில் கோரியிருந்தார்.


இந்த வழக்கு இன்று சென்னை உயர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்த நிலையில், சிங்கமுத்து 2 வாரத்துக்குள் பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும் என்று தெரிவித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.கால அவகாசம் கேட்டு சிங்கமுத்து தரப்பு வழக்குரைஞர் கோரிக்கையை ஏற்று 2 வாரம் அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.. பகிரவும்:

நிமிடத்திற்கு நிமிடம் செய்திகள்! எங்களது வாட்ஸ்அப் சேனலில் இணையுங்கள்.

Join Channel