Tamil News & polling
வேட்டையன் படத்தில் சர்ச்சைக்குரிய காட்சி இடம் பெற்றுள்ளதால், அதனை நீக்க வேண்டும் என கோவில்பட்டி அமைச்சர் உள்பட அனைவரும் எதிர்ப்பு குரல் எழுப்பியுள்ளனர்.
தூத்துக்குடி: ‘மனசிலாயோ சாரே’ என்ற அக்மார்க் வசனத்தில் இருந்து பிரித்தெடுக்கப்பட்ட ‘மனசிலாயோ’ பாடல் இடம் பெற்றுள்ள வேட்டையன் திரைப்படம் நேற்று முன்தினம் (அக்.10) உலகெங்கிலும் உள்ள திரையரங்குகளில் வெளியானது. ஜெய்பீம் புகழ் இயக்குநர் த.செ.ஞானவேல் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் உருவான இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார்.
மேலும், இதில் அமிதாப் பச்சன், மஞ்சு வாரியர், பகத் பாசில், ரித்திகா சிங் என ஒரு நட்சத்திரப் பட்டாளமே நடித்துள்ளது. இந்த நிலையில், நல்ல விமர்சனங்கள் உடன் வேட்டையன் திரையரங்குகளில் ஓடி வருகிறது. ஆனால், இப்படத்திற்கு எதிராக தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள கோவில்பட்டி நகரமே கொடி தூக்கியுள்ளது.
காரணம், இதில் சர்ச்சைக்குரிய காட்சிகள் இருப்பதாகவும், அதனை நீக்கிவிட்டு படத்தை மீண்டும் வெளியிட வேண்டும் எனவும் அவர்கள் கோரிக்கை வைக்கின்றனர். அதிலும், சிலர் இது குறித்து கோவில்பட்டி கிழக்கு காவல் நிலையத்தில் புகாரும் அளித்துள்ளனர். அது மட்டுமல்லாமல், கோவில்பட்டியில் வேட்டையன் படம் திரையிடப்பட்ட தியேட்டர் முன்பு போராட்டத்திலும் ஈடுபட்டனர்.
இந்த நிலையில், அதிமுக முன்னாள் அமைச்சரும், கோவில்பட்டி எம்எல்ஏவுமான கடம்பூர் ராஜூ செய்தியாளர்களிடம் பேசுகையில், “கோவில்பட்டி காந்திநகர் அரசுப் பள்ளி குறித்து வேட்டையன் படத்தில் தவறாக சித்தரிக்கப்பட்டுள்ளதாக மாணவர்கள், ஆசிரியர்கள், பொதுமக்கள் என பலரும் என்னிடம் ஆதங்கத்தை தெரிவித்தனர்.
அப்பள்ளி நடுநிலைப் பள்ளியாக இருந்த நிலையில், நான் அமைச்சராக இருந்தபோது அதனை உயர்நிலைப் பள்ளியாக தரம் உயர்த்தினேன். அரசு பொதுத் தேர்வில் 100 சதவீதம் தேர்ச்சி பெறும் பள்ளியை வேட்டையன் படத்தில் இடம் பெற்றுள்ள காட்சியால் அங்கு பயிலும் மாணவர்கள், ஆசிரியர்கள் வேதனை அடைந்துள்ளனர். எனவே, இது குறித்து தயாரிப்பாளர் தமிழ்குமரன் மற்றும் இயக்குநர் ஞானவேலிடம் கூறினேன்.
அவரும், அந்தக் காட்சியை விரைவில் நீக்குவதாக உறுதி அளித்தார். மிக விரைவில் அதனை நீக்கவில்லை என்றால், பொதுமக்களுடன் சேர்ந்து போராட்டம் நடத்தப்படும். இதனை மேற்கொள்ள நான் தனிப்பட்ட முறையில் நடவடிக்கை எடுத்து வருகிறேன்” எனத் தெரிவித்தார்.
அப்படி என்னதான் அந்த காட்சியில் இடம் பெற்றுள்ளது எனக் கேட்டால், கோவில்பட்டி காந்திநகர் அரசுப் பள்ளியில் மாணவர்கள் சிலர் அங்கு பணிபுரியும் ஆசிரியரை ஆபாசமாக புகைப்படம் எடுப்பதாக காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. இந்த சர்ச்சைக்குரிய காட்சியை நீக்கவே தற்போது கோரிக்கை வலுத்து வருகிறது.

விஜய் Vijay DMK Chennai சென்னை திமுக TVK தவெக அண்ணாமலை Annamalai அதிமுக பாஜக கனமழை BJP எடப்பாடி பழனிசாமி Tamil Nadu தமிழக வெற்றிக் கழகம் TTV Dhinakaran திருமாவளவன் ADMK AIADMK டிடிவி தினகரன் AMMK Thirumavalavan MK Stalin மு.க.ஸ்டாலின் அன்புமணி ராமதாஸ் Anbumani Ramadoss PMK சீமான் செங்கோட்டையன் தமிழ்நாடு Edappadi Palaniswami Sengottaiyan Seeman Congress சட்டசபை தேர்தல் வடகிழக்கு பருவமழை பாமக முக ஸ்டாலின் Nellai Tamilaga Vettri Kazhagam உதயநிதி ஸ்டாலின் நெல்லை தமிழகம் Thoothukudi காங்கிரஸ்