Tamil News & polling
சர்ச்சைக்குரிய மூன்று வேளாண் சட்டங்களை வாபஸ் பெறுவதாக இன்று அறிவித்த பிரதமர் நரேந்திர மோடி விவசாயிகளின் ஒரு பிரிவினருக்கு இந்த சட்டத்தின் நன்மைகளை புரிய வைக்க முடியாமல் சென்றதற்காக மன்னிப்புக் கேட்டுக் கொள்வதாக தெரிவித்தார்.
விவசாய உற்பத்தி வணிகம் மற்றும் வியாபாரம், விவசாயிகள் விலை உறுதி ஒப்பந்தம் மற்றும் சேவைகள், அத்தியாவசிய பொருட்கள் சட்டம் ஆகிய மூன்று சட்டங்கள் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் தொடங்கிய நாடாளுமன்றத்தின் குளிர்காலக் கூட்டத் தொடரின்போது நிறைவேற்றப்பட்டன.
அந்த ஆண்டு செப்டம்பர் 27ம் தேதி இந்த மூன்று சட்டங்களுக்கும் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் ஒப்புதல் வழங்கினார்.
இந்த மூன்று சட்டங்கள் காரணமாக விவசாயிகளின் வருமானம் பல மடங்கு உயரும் என்பது மத்திய அரசின் வாதமாக இருந்தது. ஆனால் , விவசாய சங்கத்தினர் தங்களது விளைபொருட்களில் பெரும் வணிக நிறுவனங்கள் ஆதிக்கம் செலுத்த ஆரம்பிப்பார்கள் என்று குற்றம் சாட்டினார்கள். பஞ்சாப் , ஹரியானா, உத்தரப் பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களைச் சேர்ந்த விவசாயிகள் டெல்லி எல்லைகளில் கடந்த ஆண்டு நவம்பர் 26ம் தேதி முதல் போராட்டத்தை தொடங்கினார்கள்.
தற்போது இந்த போராட்டம் ஒரு வருடத்தை நிறைவு செய்ய உள்ள நிலையில் தான் இன்று காலை 9 மணிக்கு பிரதமர் நரேந்திர மோடி தொலைக்காட்சியில் தோன்றி அந்த நாட்டு மக்களிடையே உரையாற்றினார். அப்போது சர்ச்சைக்குரிய 3 வேளாண் சட்டங்களை வாபஸ் பெறுவதாக அவர் அறிவித்தார்.
மேலும் விவசாயிகளின் நலன் காக்க இந்த சட்டங்கள் கொண்டுவரப்பட்டதாகவும் , விவசாயிகளின் துன்பங்கள் என்ன என்பது தனக்கு தெரியும் என்றும் அவர் குறிப்பிட்டார். அதேநேரம் இந்த சட்டத்தின் நலன்கள் பற்றி விவசாயிகளின் ஒரு பிரிவினரிடையே விழிப்புணர்வை ஏற்படுத்துவதில் நாங்கள் தோல்வி அடைந்துவிட்டோம். இதற்காக நாட்டு மக்களிடம் நான் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன். இந்த மூன்று சட்டங்களும் வாபஸ் பெறப்படும் என்று நரேந்திர மோடி அறிவித்துள்ளார்.
அதே நேரம், ஓராண்டாக விவசாயிகள், பல்வேறு துன்பங்களை அனுபவித்துள்ளனர். எனவே, போராட்டம் நடத்திய விவசாயிகளிடம் பிரதமர் நரேந்திர மோடி மன்னிப்பு கேட்க வேண்டும். அதை விடுத்து இந்த சட்டங்களை புரியவைக்க முடியவில்லை என்பதால் வாபஸ் பெறுகிறேன் என்று கூறி நாட்டு மக்களிடம் மன்னிப்பு கேட்டுள்ளார் மோடி என்று காங்கிரஸ் ஆதரவு நெட்டிசன்கள் சமூக வலைத்தளங்களில் விமர்சனங்கள் செய்து வருகின்றனர்.

விஜய் Vijay DMK Chennai சென்னை திமுக TVK தவெக அண்ணாமலை Annamalai அதிமுக பாஜக கனமழை BJP எடப்பாடி பழனிசாமி Tamil Nadu தமிழக வெற்றிக் கழகம் TTV Dhinakaran திருமாவளவன் ADMK AIADMK டிடிவி தினகரன் AMMK Thirumavalavan MK Stalin மு.க.ஸ்டாலின் அன்புமணி ராமதாஸ் Anbumani Ramadoss PMK சீமான் செங்கோட்டையன் தமிழ்நாடு Edappadi Palaniswami Sengottaiyan Seeman Congress சட்டசபை தேர்தல் வடகிழக்கு பருவமழை பாமக முக ஸ்டாலின் Nellai Tamilaga Vettri Kazhagam உதயநிதி ஸ்டாலின் நெல்லை தமிழகம் Thoothukudi காங்கிரஸ்