வேளாங்கண்ணி பேராலய விழா காலங்களில் கடற்கரையில் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது என கலெக்டர் அருண்தம்புராஜ் கூறினார். நாகை மாவட்டம் வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய அன்னை ஆண்டு பெருவிழா முன்னேற்பாடு பணிகள் குறித்த கூட்டம், ஆரோக்கியமாதா புதிய திருமண மண்டபத்தில் நேற்று நடந்தது. வேளாங்கண்ணி பேரூராட்சி செயல் அலுவலர் பொன்னுசாமி வரவேற்றார்.
கலெக்டர் அருண் தம்புராஜ் தலைமை வகித்து பேசியதாவது:
வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய அன்னை ஆண்டு பெருவிழா வரும் 29ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கி செப்டம்பர் 8ம் தேதி வரை நடக்கிறது. பெருவிழா தேரோட்டம் செப்டம்பர் 7ம் தேதி இரவு நடக்கிறது. விழா காலங்களில் பல்வேறு மண்டலங்களில் இருந்து சிறப்பு பஸ்களை இரவு, பகலாக இயக்க வேண்டும். திருட்டு சம்பவங்களை தடுக்க உயர் கண்காணிப்பு கோபுரங்கள் மற்றும் சிசிடிவி கேமராக்கள் அதிகளவில் பொருத்த வேண்டும்.
பொதுமக்கள் கடற்கரையின் அருகில் செல்வதற்கு எல்லை நிர்ணயம் செய்து தடை விதிக்க வேண்டும். விழா நாட்களில் வேளாங்கண்ணி கடற்கரையில் பொதுமக்கள், பக்தர்கள் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. 10 இடங்களுக்கு மேல் மருத்துவ முகாம்கள், கொரோனா தடுப்பூசி முகாம்களை நடத்த வேண்டும். அனைத்து உணவு விடுதிகளை உணவு பாதுகாப்பு துறை ஆய்வு செய்ய வேண்டும்.
வேளாங்கண்ணியில் தேவையான தீயணைப்பு வாகனங்கள், உயிர் காக்கும் ரப்பர் படகுகள் மற்றும் தீயணைப்பு வீரர்களை தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும். இந்த முன்னேற்பாடு பணிகளை வரும் 14ம் தேதிக்குள் முடிக்க வேண்டும் என்றார்.கூட்டத்தில் எஸ்பி ஜவஹர், டிஆர்ஓ ஷகிலா, நாகை ஆர்டிஓ முருகேசன், உணவு பாதுகாப்பு துறை மாவட்ட நியமன அலுவலர் புஷ்பராஜ், பேராலய பங்கு தந்தை அற்புதராஜ், பேரூராட்சி தலைவர் சார்லஸ்டயானா, துணைத்தலைவர் தாமஸ் ஆல்வா எடிசன் மற்றும் பலர் பங்கேற்றனர்.
மேலும் இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள
E7 Tamil Whatsapp Channel-ஐ Follow பண்ணுங்க
Whatsapp Channel Link:-
https://whatsapp.com/channel/0029Va9LGy4FXUuiUvhKXV1S