இந்திய கிரிக்கெட் அணியின் நம்பிக்கை நட்சத்திரமாக வளர்ந்து வரும் பேட்ஸ்மேன் சுப்மன் கில், இன்று விராட் கோலி மற்றும் ஷிகர் தவானின் சாதனையை முறியடித்துள்ளார். ஒரே ஒரு இன்னிங்சில் அவரது உலக சாதனை தவறியுள்ளது. நியூசிலாந்து அணிக்கு எதிரான, ஒருநாள் கிரிக்கெட் தொடர் இன்று ஐதராபாத் ராஜீவ்காந்தி மைதானத்தில் தொடங்கியது. இதில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணியின் தொடக்க வீரர்களாக ரோகித் சர்மா மற்றும் சுப்மன் கில் ஆகியோர் களத்தில் இறங்கினர்.
சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய சுப்மன் 87 பந்துகளில் சதமடித்து அற்புதமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். கடந்த ஞாயிறன்று திருவனந்தபுரத்தில் நடந்த இலங்கை அணிக்கு எதிரான 3வது ஒருநாள் கிரிக்கெட் போட்டியிலும் சுப்மன் கில் சதமடித்தார். இன்றைய ஆட்டத்தில் விராட் கோலி, ரோகித் சர்மா, சூர்யகுமார் யாதவ், இஷான் கிஷன் ஆகிய முக்கிய ஆட்டக்காரர்கள் ஏமாற்றம் அளித்த நிலையில், சுப்மன் கில் நிலைத்து நின்று விளையாடி அணியின் ஸ்கோரை உயர்த்தினார்.
இந்நிலையில் இன்றைய ஆட்டத்தில் ரன் குவித்து, அதன் மூலம் விராட் கோலி மற்றும் ஷிகர் தவானின் சாதனையை சுப்மன் கில் முறிடியத்துள்ளார். அதாவது ஒருநாள் போட்டிகளில் வெறும் 19 இன்னிங்ஸ்களில் மட்டுமே விளையாடி 1000 ரன்களை அவர் கடந்துள்ளார். விராட் கோலி மற்றும் ஷிகர் தவான் ஆகியோருக்கு 1000 ரன்களை ஒருநாள் போட்டிகளில் எடுக்க, 24 இன்னிங்ஸ்கள் தேவைப்பட்டன. பாகிஸ்தான் அணியை சேர்ந்த பகர் சமான் முதலிடத்தில் உள்ளார். இவர் 18 இன்னிங்ஸ்களில் 1000 ரன்களை கடந்து இருக்கிறார்.
இந்நிலையில் சர்வதேச அளவில் ஒருநாள் போட்டிகளில் வேகமாக 1000 ரன்களை கடந்தவர் பட்டியலில், இரண்டாம் இடத்தை சுப்மன் கில் பிடித்துள்ளார். 23 வயதாகும் சுப்மன் கில் தனக்கு கிடைத்த வாய்ப்பை அற்புதமாக பயன்படுத்தியுள்ளார் என்று கிரிக்கெட் வர்ணனையாளர்களும், ரசிகர்களும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.
மேலும் இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள
E7 Tamil Whatsapp Channel-ஐ Follow பண்ணுங்க
Whatsapp Channel Link:-
https://whatsapp.com/channel/0029Va9LGy4FXUuiUvhKXV1S