இல்லத்தரசி கூப்பன் ரூ.8,000 யாருக்கு எல்லாம் கிடைக்கும்? - கனிமொழி எம்.பி. விளக்கம்
சென்னை,
சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக தேர்தல் அறிக்கைக்குழு தலைவர் கனிமொழி எம்.பி. செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது:-
தி.மு.க.வின் கடந்த தேர்தல் அறிக்கை போலவே, இந்த தேர்தல் அறிக்கையும் நாட்டிற்கே வழிகாட்டும். 80,000 மக்களின் கருத்துகளைப் பெற்று தி.மு.க. தேர்தல் அறிக்கையை வெளியிட்டுள்ளோம். நிறைவேற்றக்கூடிய வாக்குறுதிகளையே தேர்தல் அறிக்கையில் இடம்பெறச் செய்துள்ளோம்.
தி.மு.க.வின் தேர்தல் அறிக்கை காப்பியடிக்கப்பட்டதாக கூறுவது வேடிக்கையானது. கடந்த தேர்தல் வாக்குறுதிகளில் 505-இல் 404 வாக்குறுதிகளை நிறைவேற்றியுள்ளோம். எடப்பாடி பழனிசாமி, அன்புமணி ஆகியோருக்கு கணக்கு தெரிந்த யாராவது வகுப்பு எடுக்க வேண்டும். அ.தி.மு.க. ஆட்சியில் செயல்படுத்தாத வாக்குறுதிகளை பட்டியலிட்டால், அது நீண்டுக்கொண்டே போகும்.
எடப்பாடி பழனிசாமிக்கு யாராவது சதவீத கணக்கை சொல்லி கொடுங்கள். திமுக தொடங்கிய மகளிர் உரிமைத் தொகை திட்டத்தை அதிமுகதான் காப்பி அடித்துள்ளது. நாங்கள் தொடங்கிய உரிமைத் தொகை திட்டத்திற்கு ரூ.2,000 என அறிவிக்கிறார் எடப்பாடி பழனிசாமி.
உலகத்தில் உள்ள பொருளாதார நிபுணர்கள் பலரும், ஒரு நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்காக மக்களின் கையில் பணம் இருக்க வேண்டும் என்று கூறுகின்றனர். மக்களிடம் வாங்கும் சக்தி அதிகரித்தால்தான் பொருளாதாரம் உயரும். இதை அறியாமல் "இலவசம்... இலவசம்" என்ற வார்த்தையை பயன்படுத்தி சிலர் அவதூறு பிரசாரம் மேற்கொண்டு வருகிறார்கள்; அரசியல் செய்கிறார்கள்.
பொள்ளாச்சியில் நடந்த பாலியல் குற்றத்தை எப்.ஐ.ஆர். கூட பதிவிட முன்வராமல் குற்றவாளிகளை காப்பாற்ற அத்தனை முயற்சிகளை செய்தது அதிமுக. இந்த ஆட்சியில் பெண்களுக்கு எதிராக ஒரு குற்றம் நடந்தால் குற்றவாளிக்கு தண்டனை கிடைப்பதை உறுதி செய்கிறார் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின். திமுக ஆட்சியில் குற்றம் நடந்தால் பாரபட்சமின்றி உடனே நடவடிக்கை எடுக்கப்பட்டது. இவ்வாறு அவர் கூறினார்.
இல்லத்தரசிகளுக்கான ரூ.8,000 மதிப்பிலான கூப்பன் எந்த அடிப்படையில் வழங்க போகிறீர்கள் என்ற கேள்விக்கு “இதை முதல்-அமைச்சர் தெளிவாக கூறியுள்ளார். வருமான வரி செலுத்தாத பெண்களுக்கு ரூ.8,000 மதிப்புள்ள கூப்பன் வழங்கப்படும். பல பேர் வீட்டில் பிரிட்ஜ் இருக்கலாம் அவர்களுக்கு , என்ன பொருள் தேவைப்படுகிறதோ அதை இந்த கூப்பன் மூலமாக வாங்கிக் கொள்ளலாம் எனவும் அவர் விளக்கியுள்ளார் என்று கூறினார்.
வாட்ஸ்அப் சேனலில் உடனுக்குடன் செய்திகளைப் பெறுக!
Join WhatsApp Channel