அதிகரிக்கும் சாலை விபத்துகள்: தமிழ்நாடு முதலிடம்

நாடாளுமன்றத்தின் மக்களவையில் சாலை விபத்துகள் தொடர்பாக எழுப்பப்பட்ட கேள்விக்கு மத்திய சாலை போக்குவரத்துத்துறை மந்திரி நிதின் கட்கரி எழுத்துப்பூர்வமாக பதிலளித்தார். அதில் அவர் கூறியதாவது:

இந்தியாவில் 2025-ம் ஆண்டு நிகழ்ந்த 5,13,563 சாலை விபத்துகளில் 1,83,382 பேர் உயிரிழந்துள்ளனர்.

இது 2024-ம் ஆண்டில் பதிவான 1,77,175 மரணங்களுடன் ஒப்பிடுகையில் 3.5 சதவீதம் உயிரிழப்புகள் அதிகரித்துள்ளது.

மொத்த விபத்துகளின் எண்ணிக்கை 5.3 சதவீதம் உயர்ந்து 5,13,563 ஆக பதிவாகியுள்ளது.

நாட்டில் சராசரியாக ஒரு மணி நேரத்திற்கு 59 சாலை விபத்துகள் ஏற்படுகின்றன. அதில் 21 பேர் உயிரிழக்கின்றனர்.

தினமும் 502 பேர் சாலை விபத்துகளில் உயிரிழக்கின்றனர்.

சாலை விபத்து மரணங்களில் உத்தர பிரதேசம் முதலிடத்திலும், தமிழ்நாடு இரண்டாவது இடத்திலும் உள்ளன.

உத்தர பிரதேசத்தில் சாலை விபத்து மரணங்கள் கடுமையாக உயர்ந்துள்ளன. அங்கு கடந்த ஆண்டு 27,550 பேர் சாலை விபத்துகளில் உயிரிழந்தனர். 2024-ம் ஆண்டு 24,118-ல் இருந்து 27,550 ஆக அதிகரித்துள்ளது.

தமிழ்நாட்டில் சாலை விபத்துகளில் 18,505 பேர் உயிரிழந்துள்ளனர். நாட்டிலேயே அதிக சாலை விபத்துகள் நடைபெறும் மாநிலமாக தமிழ்நாடு உள்ளது. 2025-ல் தமிழ்நாட்டில் 71,387 சாலை விபத்துகள் பதிவாகி உள்ளன.

பஞ்சாபில் குறைந்தபட்சமாக 3,062 பேர் சாலை விபத்துகளில் இறந்துள்ளனர். பஞ்சாபில் சாலை விபத்து மரணங்கள் 4,759-லிருந்து 3,062 ஆக கணிசமாகக் குறைந்துள்ளன.

பீகார், மகாராஷ்டிரா, குஜராத் ஆகிய மாநிலங்களிலும் சாலை விபத்து மரணங்கள் உயர்ந்துள்ளன. அதேவேளையில், சத்தீஸ்கர், கர்நாடகா, தெலுங்கானா, டெல்லி ஆகிய மாநிலங்களிலும் உயிரிழப்புகளின் எண்ணிக்கை சரிவைக் கண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

பகிரவும் (Share):

நிமிடத்திற்கு நிமிடம் செய்திகள்! எங்களது வாட்ஸ்அப் சேனலில் இணையுங்கள்.

Join Channel