தர்மேந்திர பிரதான் பதவி விலகுவாரா? - இன்று மூன்றாம் கட்ட பேச்சுவார்த்தை
டெல்லியில் கரப்பான்பூச்சி கட்சி தொடங்கிய நீட் தேர்வுக்கு எதிரான மற்றும் தர்மேந்திர பிரதான் பதவி விலகல் தொடர்பான போராட்டம் தற்போது இந்தியா முழுவதும் தீவிரமடைந்துள்ளது.
இந்தப் போராட்டத்தைக் கட்டுப்படுத்த மத்திய அரசு கரப்பான்பூச்சி கட்சியினருடன் இரு கட்ட பேச்சுவார்த்தை நடத்தியுள்ளது.
மத்திய அமைச்சர் ஜே.பி.நட்டாவுடனான முதல்கட்ட பேச்சுவார்த்தையில் தர்மேந்திர பிரதான் பதவி விலகல், நீட் தேர்வால் உயிரிழந்தோர் குடும்பத்தினருக்கு ரூ.1 கோடி நிவாரணம், உயர்கல்வித்துறையில் சீர்த்திருத்தங்களை மேற்கொள்ளுதல் என 3 கோரிக்கைகளை கரப்பான்பூச்சி கட்சியினர் முன்வைத்தனர்.
நேற்று 2-வது முறையாக பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. இந்த பேச்சுவார்த்தை இரு தரப்பினருக்கும் பொதுவாக அரசியல் சாசன கிளப்பில் நடைபெற்றது. அரசாங்கம் தரப்பில் சுகாதார மந்திரி ஜே.பி.நட்டா, பிரதமர் அலுவலக மந்திரி ஜிதேந்திர சிங் ஆகியோர் கலந்து கொண்டனர். கரப்பான் பூச்சி ஜனதா தரப்பில் இருந்து அதன் செய்தி தொடர்பாளர்கள் சவுரவ் தாஸ், அசுதோஷ் ரங்கா ஆகியோர் பங்கேற்றனர். கூட்டம் சுமார் 2 மணி நேரம் நடைபெற்றது.
இந்தப் பேச்சுவார்த்தையின்போது தர்மேந்திர பிரதானின் பதவி விலகல் கோரிக்கை சமரசத்திற்கு அப்பாற்பட்டது என சி.ஜே.பி. தேசிய செய்தித் தொடர்பாளர்கள் சௌரவ் தாஸ் மற்றும் அஷுதோஷ் ரங்கா ஆகியோர் பேச்சுவார்த்தையில் பங்கேற்ற அமைச்சர்களிடம் தெரிவித்தனர்.
இதுதொடர்பாக ஆலோசிக்க நாளை (இன்று) மதியம் வரை மத்திய அரசு தரப்பில் அவகாசம் கோரப்பட்டது.
இந்நிலையில், இன்று பிற்பகல் மீண்டும் பேச்சுவார்த்தை நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதில் முக்கிய முடிவுகள் எடுக்கப்படும் என தெரிகிறது.