சுதந்திர தின விழாவை 2-வது ஆண்டாக புறக்கணித்த கார்கே, ராகுல் - காரணம் இதுதான்!

மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல்காந்தியும், கார்கேவும் தொடர்ந்து 2-வது ஆண்டாக சுதந்திர தின விழாவில் பங்கேற்கவில்லை.

டெல்லி செங்கோட்டையில் நடைபெற்ற 80-வது சுதந்திர தின விழாவில் பிரதமர் மோடி தேசியக்கொடியை ஏற்றி வைத்தார். இந்த விழாவில் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே, பாராளுமன்ற மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல்காந்தி ஆகியோர் கலந்து கொள்ளவில்லை. அவர்கள் தொடர்ந்து 2-வது ஆண்டாக சுதந்திர தின விழாவை புறக்கணித்தனர்.

2024-ம் ஆண்டு நடைபெற்ற சுதந்திர தின விழாவின்போது சர்ச்சை எழுந்தது. மக்களவை எதிர்க்கட்சி தலைவரான ராகுல்காந்தி மத்திய மந்திரிக்கு இணையான அந்தஸ்து கொண்டவர் ஆவார். செங்கோட்டையில் நடைபெற்ற சுதந்திர தின விழா நிகழ்ச்சியில் வழக்கமான மரபு மற்றும் நெறிமுறைகளுக்கு மாறாக கடைசி வரிசையில் அவருக்கு இருக்கை ஒதுக்கப்பட்டதால் சர்ச்சை எழுந்தது.

ராகுல்காந்திக்கு பின் வரிசையில் இருக்கை ஒதுக்கியது மக்களுக்கு இழைக்கப்பட்ட அவமரியாதை என்று எதிர்க்கட்சிகள் விமர்சித்தன. அதே நேரத்தில் ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்ற வீரர்களுக்கு இடம் அளிக்கும் வகையில் இருக்கை அமைப்பில் மாற்றம் செய்யப்பட்டதாக நிகழ்ச்சியை ஏற்பாடு செய்திருந்த பாதுகாப்பு அமைச்சகம் விளக்கம் அளித்து இருந்தது.

அரசின் நெறிமுறைகளின்படி இத்தகைய முக்கிய விழாக்களின்போது எதிர்க்கட்சி தலைவர் முன்வரிசையில் அமர வைக்கப்பட வேண்டும் என்பது வழக்கமாகும். இதன் காரணமாகவே ராகுல்காந்தியும், கார்கேவும் தொடர்ந்து 2-வது ஆண்டாக சுதந்திர தின விழாவில் பங்கேற்கவில்லை.

பகிரவும் (Share):

நிமிடத்திற்கு நிமிடம் செய்திகள்! எங்களது வாட்ஸ்அப் சேனலில் இணையுங்கள்.

Join Channel