பனிக்கரடியின் ஆழ்ந்த தூக்கத்தை கெடுத்த நபருக்கு ரூ.5 லட்சம் அபராதம்
நார்வேயின் தீவுக்கூட்டமான ஸ்வால்பார்ட் கடற்கரையில் தூங்கிக் கொண்டிருந்த பனிக்கரடியை படகில் சென்ற நபர் ஒலி எழுப்பி எழுப்பியதற்காக, அவருக்கு ரூ. 5 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
வட துருவத்தில் இருந்து சுமார் 620 மைல் தொலைவில் நார்வே நாடு அமைந்துள்ளது. இங்குள்ள தீவுக்கூடமான பனிசூழ்ந்த ஸ்வால்பார்ட் கடற்கரையில் வெள்ளை பனிக்கரடிகள் வாழ்ந்து வருகிறது.
ஸ்வால்பார்டில் பனிக்கரடிகள் 1972ஆம் ஆண்டு முதல் பாதுகாக்கப்பட்ட இனமாக இருந்து வருகின்றன. மேலும் அவற்றுக்கு இடையூறு விளைவிப்பது கடுமையான சட்ட விளைவுகளை ஏற்படுத்தும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த கடற்கரைக்கு உள்ளூர் கப்பலில் சுற்றுலா பயணி ஒருவர் கடந்த வாரத்தில் சென்றுள்ளார். அந்த சமயத்தில் கடற்கரையில் பனிக்கரடி ஒன்று ஓய்வெடுத்துக் கொண்டிருந்தது.
அப்போது அந்த கரடி நகர்வதை பார்க்க விரும்பிய அந்த நபர், வேண்டுமென்றே கப்பலில் இருந்த ஒலி எழுப்பானை எழுப்பி கரடியை திகிலடைய செய்துள்ளார்.
இதையடுத்து திடீரென்று எழுப்பப்பட்ட அந்த சத்தத்தால் திகிலடைந்த அந்த கரடி, விழித்துக்கொண்டு அந்த இடத்தை விட்டு தப்பி ஓடியுள்ளது.
இந்த சம்பவத்தை பார்த்த உள்ளூர் காவல்துறை அதிகாரிகள், அவர் மீது வழக்கு பதிவு செய்து சட்ட நடவடிக்கை எடுப்பதற்காக ஸ்வால்பார்ட் ஆளுநரான லாரஸ் ஃபெளஸ்-இடம் அழைத்து சென்றனர்.
இந்த வழக்கை விசாரித்த ஆளுநர், “கப்பல் அந்த கரடியை கடந்து சென்றபோது, அதில் பயணம் செய்தவர்கள் உறங்கி கொண்டிருந்த ஒரு பனிக்கரடியை கண்டுள்ளனர்.
பின்னர் அந்த கப்பலில் இருந்த ஒருவர், அதிகமான ஒலியை எழுப்பி அந்த கரடியை எழுப்பியுள்ளார். இதையடுத்து அந்த கரடி வேறு இடத்திற்கு சென்றுள்ளது.
ஸ்வால்பார்ட் சுற்றுச்சூழல் பாதுகாப்பு சட்டத்தின்படி, பனிக்கரடிகளை தேவையின்றி தொந்தரவு செய்வது மற்றும் துரத்துவது அல்லது பிடிக்க முயற்சிப்பது முற்றிலும் சட்டவிரோதமாகும்.
வனவிலங்குகளின் கடுமையான வாழ்விடத்தில் அவற்றுக்கு மன அழுத்தத்தை ஏற்படுத்துவதையோ அல்லது அவற்றின் இயல்பான நடத்தையை மாற்றுவதையோ சுற்றுலா பயணிகள் தவிர்க்க வேண்டும்.
மேலும் விலங்குகள் வசிக்கும் இடத்தில் இருந்து பாதுகாப்பான தூரத்தை சுற்றுலா பயணிகள் கடைபிடிக்க வேண்டும் என விதிமுறைகள் வலியுறுத்துகின்றன.
பனிக்கரடியை தொந்தரவு செய்த நபருக்கு ன் நார்வேஜியன் குரோனர் 50,000 (இந்திய மதிப்பில் ரூ.4.5 லட்சம் முதல் 5 லட்சம் வரை) அபராதமாக விதிக்கப்படுகிறது” என்று தீர்ப்பளித்தார்.