தமிழ்நாடு | நேரலை செய்திகள்
FLASH தற்போதைய முக்கியச் செய்திகள் உடனுக்குடன் அறிய இந்தியன் 7 (INDIAN 7) இணைந்திருங்கள். வாட்ஸ்அப் சேனலில் தொடர்ந்து செய்திகளைப் பெறுக.

கத்தி கூப்பாடு போடுவது அநாகரிகமான அரசியல்..!- சட்டசபையில் முதலமைச்சர் விஜயின் பேச்சுக்கு நயினார் விமர்சனம்

கத்தி கூப்பாடு போடுவது அநாகரிகமான அரசியல் என சட்டசபையில் முதலமைச்சர் விஜயின் குறித்து பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் விமர்சித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் கூறியிருப்பதாவது:-

சட்டமன்றம் உங்கள் சினிமா ஸ்டுடியோ அல்ல முதலமைச்சர் விஜய் அவர்களே!

உங்கள் அடுக்கடுக்கான வசனங்களை கேட்டு ஆர்ப்பரிப்பதற்கு தமிழக மக்கள் ஒன்றும் உங்கள் கட்சியின் ஆச்சரியக்குறிகள் அல்ல.

உங்கள் கட்சிக்கு இரண்டு அமைச்சர்களை வழங்கிய கோயம்புத்தூர் மாவட்டத்தில் கடந்த ஒரு மாதத்தில் மட்டும் 10 கொலைகள் நடந்துள்ளன, உங்கள் அலுவலகம் அமைந்துள்ள சென்னை மாநகரில் நேற்று ஒரே நாளில் மட்டும் இரண்டு படுகொலைகள் நடந்துள்ளன, நீங்கள் ஆட்சிப் பொறுப்பேற்றதில் இருந்து 6 காவல் மரணங்கள் நிகழ்ந்துள்ளன, பாதுகாப்புப் பணியில் இருக்கும் காவலர்களில் சிலர் பொதுமக்களை தரக்குறைவாக நடத்துகின்றனர், உங்கள் நேரடிக் கட்டுப்பாட்டில் இயங்கும் காவல்துறையின் மீது மக்கள் நம்பிக்கை இழந்து விட்டனர்.

அப்படியிருக்கையில் இன்று சட்டமன்றத்தில் நடைபெற்ற காவல்துறை மானியக் கோரிக்கைகள் மீதான விவாதத்தின் போது, இந்த அவலங்களுக்கெல்லாம் நீங்கள் முறையாக பதில் அளித்திருக்க வேண்டும்.

சீரழிந்து கொண்டிருக்கும் தமிழகத்தின் சட்டம் ஒழுங்கிற்கு முழுப் பொறுப்பேற்று, மக்கள் பாதுகாப்பிற்கென புதிய திட்டங்களை நீங்கள் முன்மொழிந்திருக்க வேண்டும். மக்களின் உயிருக்கும் உடமைக்கும் உத்தரவாதம் அளித்திருக்க வேண்டும்.

ஆனால், நீங்களோ “எனக்கும் சட்டம் ஒழுங்கிற்கும் எந்த தொடர்புமில்லை” என்ற ரீதியில், அதிரடி திரைப்படத்தில் அடுக்கடுக்கான வசனங்கள் பேசுவது போல கத்தி கூப்பாடு போடுவது, அநாகரிகமான அரசியல். எனவே, மக்கள் மன்றத்தில் மக்கள் நலன் சார்ந்த விஷயங்களை மட்டும் பேசுங்கள் முதல்வரே,"தந்தை, மகன்" கதையெல்லாம் தமிழக மக்களுக்கு தேவையில்லை.

இவ்வாறு அவர் கூறினார்.

இந்தச் செய்தியைப் பகிரவும்:

வாட்ஸ்அப் சேனலில் உடனுக்குடன் செய்திகளைப் பெறுக!

Join WhatsApp Channel