ஐபிஎல்: முதல் ஓவரில் 3 விக்கெட்டுகள் வீழ்த்தி வரலாறு படைத்த அறிமுக வீரர்!
முதல் ஓவரிலேயே மூன்று விக்கெட்டுகளை வீழ்த்தி அறிமுக வீரர் பிரஃபுல் ஹிஞ்ச் ஐபிஎல் தொடரில் வரலாறு படைத்துள்ளார்.ஐபிஎல் தொடரில் ஹைதராபாதில் நடைபெற்று வரும் இன்றையப் போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் விளையாடி வருகின்றன.இந்தப் போட்டியில் முதலில் விளையாடிய சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 216 ரன்கள் எடுத்தது.
ஒரே ஓவரில் 3 விக்கெட்டுகள்; வரலாற்றுச் சாதனை!217 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி ராஜஸ்தான் ராயல்ஸ் அணி விளையாடி வருகிறது.ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் தொடக்க ஆட்டக்காரர்களாக யஷஸ்வி ஜெய்ஸ்வால் மற்றும் வைபவ் சூர்யவன்ஷி களமிறங்கினர்.சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியில் அறிமுக வீரராக களமிறங்கிய இளம் வேகப் பந்துவீச்சாளர் பிரஃபுல் ஹிஞ்ச் ஆட்டத்தின் முதல் ஓவரை வீசினார். அபார பந்துவீச்சை வெளிப்படுத்திய அவர் முதல் ஓவரிலேயே மூன்று விக்கெட்டுகளைக் கைப்பற்றி வரலாறு படைத்தார்.
வைபவ் சூர்யவன்ஷி (0 ரன்), துருவ் ஜுரெல் (0 ரன்) மற்றும் லுஹான் டி பிரிடோரியஸ் (0 ரன்) மூவரின் விக்கெட்டினையும் வீழ்த்தி அசத்தினார் பிரஃபுல் ஹிஞ்ச். ஐபிஎல் வரலாற்றில் ஆட்டத்தின் முதல் ஓவரில் வீரர் ஒருவர் மூன்று விக்கெட்டுகளைக் கைப்பற்றுவது இதுவே முதல் முறை.ஐபிஎல் வரலாற்றில் 32 முறை ஆட்டத்தின் முதல் ஓவரில் பந்துவீச்சாளரால் இரண்டு விக்கெட்டுகள் கைப்பற்றப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.