நடிகர் சூர்யாவை எட்டி உதைத்தாலோ தாக்கினாலோ அந்த இளைஞருக்கு ரூ.1 லட்சம் பரிசு வழங்கப்படும் என அறிவித்த மயிலாடுதுறை மாவட்ட பாமக செயலாளர் சித்தமல்லி பழனிச்சாமி மீது மயிலாடுதுறை காவல் நிலையத்தில் 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
நடிகர் சூர்யா தயாரித்து நடித்த ஜெய் பீம் திரைப்படம் ஓடிடி தளத்தில் வெளியாகி நல்ல விமர்சனத்தை பெற்றது.
ஆனால், படத்தில் வன்னியர்கள் குறித்து வேண்டுமென்றே தவறான குறியீடு வைத்ததாக பாமக மற்றும் வன்னியர் சங்கம் குற்றம்சாட்டி வருகின்றன.
சர்ச்சைக்குரிய அந்த குறிப்பிட்ட காட்சி நீக்கப்பட்ட பின்னரும் சூர்யா நஷ்டஈடு தர வேண்டும் என்றும் மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் வலியுறுத்தி வருகின்றன.
இதனிடையே ‘ஜெய்பீம்’ படம் குறித்த சர்ச்சையால் மயிலாடுதுறையில் ஓடிக்கொண்டிருந்த சூர்யா நடித்த ‘வேல்’ திரைப்படத்தை பாமகவினர் நிறுத்தினர்.
அத்துடன் நடிகர் சூர்யாவை எட்டி உதைத்தாலோ, தாக்கினாலோ ஒரு லட்ச ரூபாய் பரிசு வழங்கப்படும் என்று மயிலாடுதுறை பாமக மாவட்ட செயலாளர் பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியது.
இந்நிலையில், அவ்வாறு பேசிய மயிலாடுதுறை மாவட்ட பாமக செயலாளர் சித்தமல்லி பழனிச்சாமி மீது மயிலாடுதுறை காவல் நிலையத்தில் 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.