மேம்படுத்தப்பட்ட ஐ.ஆர்.சி.டி.சி. இணையதளம் - விரைவில் பயன்பாட்டிற்கு வருகிறது
பயணிகள் சிரமம் இல்லாமல் எளிதில் முன்பதிவு செய்யும் வகையில் பல்வேறு சிறப்பு அம்சங்களுடன் மேம்படுத்தப்பட்டுள்ள ஐ.ஆர்.சி.டி.சி., இணையதளம் விரைவில் பயன்பாட்டிற்கு கொண்டுவரப்பட உள்ளது.
இந்திய ரெயில்வே உணவு மற்றும் சுற்றுலா கழகம் எனப்படும் ஐ.ஆர்.சி.டி.சி., இணையதளம் மற்றும் அதன் செயலியில் பயணிகள் டிக்கெட் முன்பதிவு செய்து வருகின்றனர். தற்போதுள்ள நிலவரப்படி, 82 சதவீதத்துக்கும் மேற்பட்டோர் ஐ.ஆர்.சி.டி.சி. இணையதளத்தில் முன்பதிவு செய்கின்றனர். ஆனால், தட்கல் முன்பதிவின்போது, அடிக்கடி 'சர்வர்' பிரச்சினை ஏற்படுகிறது. 'கேப்ட்சா' குறியீடுகளும் கடினமாக இருக்கிறது. தொழில்நுட்ப கோளாறுகளால் டிக்கெட் முன்பதிவின்போது அடிக்கடி தோல்வியில் முடிகிறது.
இதனால், பயணிகள் முன்பதிவு செய்ய முடியாமல் அவதியடைந்து வருகின்றனர். இதுகுறித்து ரெயில்வே நிர்வாகத்திற்கு பல்வேறு புகார்களை பயணிகள் தெரிவித்துள்ளனர்.
இந்தநிலையில், பயணிகள் சிரமம் இல்லாமல் எளிதில் முன்பதிவு செய்யும் வகையில் பல்வேறு சிறப்பு அம்சங்களுடன் மேம்படுத்தப்பட்டுள்ள ஐ.ஆர்.சி.டி.சி., இணையதளம் விரைவில் பயன்பாட்டிற்கு கொண்டுவரப்பட உள்ளது. இதுகுறித்து, தெற்கு ரெயில்வே அதிகாரிகள் கூறியதாவது:-
பல்வேறு சிறப்பு அம்சங்களுடன் ஐ.ஆர்.சி.டி.சி. இணைதளம் மேம்படுத்தப்பட்டு தற்போது தயாராக உள்ளன. இதற்கான, முன்னோட்ட பணிகளும் நடந்து வருகின்றன. டிக்கெட் முன்பதிவை எளிமையாகவும், தடையின்றியும் செய்வதை நோக்கமாகக் கொண்டு 4 முக்கிய மேம்பாட்டு அம்சங்களுடன் உருவாக்கப்பட் டுள்ளன. முன்பதிவு செய்யும்போது தேவையற்ற கேப்ட்சாக்களை நீக்குதல். தேவையற்ற பாப்-அப்களை அகற்றுதல், ஒளிரும் கிராபிக்ஸ், கவனச்சிதறல்களை ஏற்படுத்தும் அம்சங்கள் நீக்கப்படும். அனைத்து வகுப்புகளிலும் இருக்கை கிடைப்பது ஒரே பார்வையில் பார்க்கலாம். இவ்வாறாக டிக்கெட் பதிவு செய்யும் முறைகள் எளிமைப்படுத்தி இருப்பது பயணிகளுக்கு மிகவும் வசதியாக இருக்கும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
வாட்ஸ்அப் சேனலில் உடனுக்குடன் செய்திகளைப் பெறுக!
Join WhatsApp Channel