திருப்பதியில் பக்தர்கள் வருகை அதிகரிப்பு- நேர ஒதுக்கீடு தரிசன டிக்கெட் விநியோகம் ரத்து
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தரிசனத்திற்கு வரும் பக்தர்கள் அவதி அடையாமல் இருக்க திருப்பதியில் 3 இடங்களில் நேர ஒதுக்கீடு சர்வ தரிசன டிக்கெட் வழங்கப்பட்டு வருகிறது.
வார இறுதி விடுமுறை நாட்களில் அதிக அளவு பக்தர்கள் தரிசனத்திற்கு வருவது வழக்கம். ஆனால் தற்போது வழக்கத்திற்கு மாறாக அனைத்து நாட்களிலும் பக்தர்களின் கூட்டம் அலை மோதி வருகிறது.
இன்றைய தரிசனத்திற்கான 10 ஆயிரம் சர்வ தரிசன டிக்கெட்டுகள் நேற்று அதிகாலை 5 மணிக்கு வழங்கப்பட்டது. சர்வ தரிசன டிக்கெட் 1 மணி நேரத்தில் தீர்ந்து போனதால் தொலைதூரத்தில் இருந்து அதிக செலவு செய்து தாமதமாக வந்த பக்தர்கள் தரிசன டிக்கெட் கிடைக்காமல் அவதி அடைந்தனர்.
இதேபோல் ஸ்ரீவாரி மெட்டு நடைபாதையில் 2 ஆயிரம் தரிசனம் டிக்கெட் வழங்கப்பட்டது. பக்தர்களின் கூட்டம் அதிகரித்து காணப்பட்டதால் நாளைய தரிசனத்திற்கு வழங்கப்பட இருந்த சர்வ தரிசன டிக்கெட் ரத்து செய்யப்பட்டது.
தரிசன டிக்கெட்டுகள் ரத்து செய்யப்பட்டது தெரியாமல் ஏராளமான பக்தர்கள் டிக்கெட் வழங்கும் மையங்களில் நேற்று இரவு முதல் விடிய, விடிய காத்திருந்தனர்.
பின்னர் தேவஸ்தான அதிகாரிகள் தரிசன டிக்கெட் வாங்குவது ரத்து செய்யப்பட்டதாக தெரிவித்தனர். இதையடுத்து பக்தர்கள் நேரடி இலவச தரிசனம் செய்ய திருப்பதி மலைக்கு புறப்பட்டு சென்றனர்.
நாளை மறுநாள் தரிசனத்திற்கான டிக்கெட்டுகள் நாளை வழக்கம்போல் வழங்கப்படும் என தேவஸ்தான அதிகாரிகள் தெரிவித்தனர்.
திருப்பதியில் நேற்று 82,105 பேர் தரிசனம் செய்தனர். 34,484 பக்தர்கள் முடி காணிக்கை செலுத்தினர். ரூ.5.18 கோடி உண்டியல் காணிக்கை வசூலானது.
4.17 லட்சம் லட்டுக்கள் விற்பனையானது. நேரடி இலவச தரிசனத்தில் வந்த பக்தர்கள் 18 மணி நேரம் காத்திருந்து தரிசனம் செய்தனர்.
வாட்ஸ்அப் சேனலில் உடனுக்குடன் செய்திகளைப் பெறுக!
Join WhatsApp Channel