தமிழ்நாடு | நேரலை செய்திகள்
FLASH தற்போதைய முக்கியச் செய்திகள் உடனுக்குடன் அறிய இந்தியன் 7 (INDIAN 7) இணைந்திருங்கள். வாட்ஸ்அப் சேனலில் தொடர்ந்து செய்திகளைப் பெறுக.

தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் பெயரில் நூதன மோசடி: மத்திய பிரதேசத்தில் லட்சக்கணக்கில் பணத்தை பறிகொடுத்த பொதுமக்கள்!

மத்திய பிரதேச மாநிலத்தில் தமிழ்நாடு முதலமைச்சர் விஜய்யின் பெயரைப் பயன்படுத்தி, ஏழை எளிய மக்களிடம் நிதியுதவி மற்றும் கடன் வாங்கித் தருவதாகக் கூறி லட்சக்கணக்கில் பணமோசடி செய்யப்பட்டுள்ள சம்பவம் வெளிச்சத்திற்கு வந்து பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மத்திய பிரதேச மாநிலம் இந்தூர் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் இயங்கி வரும் ஒரு கும்பல், தங்களை தமிழக முதல்வர் விஜய்யின் அறக்கட்டளை நிர்வாகிகள் என அறிமுகப்படுத்திக் கொண்டு பொதுமக்களிடம் பேசியுள்ளனர். தமிழக முதல்வர் விஜய் மூலம் சிறு தொழில் தொடங்குவதற்கான மானியக் கடன், இலவச நிதியுதவி, கல்வி நிதியுதவி மற்றும் வங்கிக் கடன் உள்ளிட்ட பல்வேறு சலுகைகள் வழங்கப்படுவதாக ஆசை வார்த்தைகள் கூறி மக்களை நம்ப வைத்துள்ளனர்.

இந்த போலி அறக்கட்டளை மூலமாக ரூ.10 லட்சம் வரை மானியம் மற்றும் நிதி உதவி பெற முடியும் எனக் கூறி மக்களைத் தொடர்புகொண்ட அந்த கும்பல், அதற்கான நடைமுறைகளுக்காக பணம் பறித்துள்ளது. விண்ணப்பப் பதிவு, ஆவணச் சரிபார்ப்பு மற்றும் வங்கி கணக்கு தொடங்குவதற்கான கட்டணம் என்ற பெயரில் தலா ரூ.1,000 முதல் ரூ.50,000 வரை ஆன்லைன் பரிவர்த்தனை வாயிலாக வசூலித்து மோசடியில் ஈடுபட்டுள்ளனர்.

பணம் செலுத்திய பிறகு குறிப்பிட்ட நபர்களைத் தொடர்புகொள்ள முடியாமலும், எவ்வித நிதியுதவியும் கிடைக்காமலும் போனதால் தாங்கள் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த பாதிக்கப்பட்ட பொதுமக்கள் காவல்நிலையத்தை நாடினர். கடந்த ஒரு மாத காலத்தில் மட்டும் இந்தூர் குற்றத்தடுப்புப் பிரிவில் இந்த மோசடி தொடர்பாக 6 அதிகாரப்பூர்வ புகார்கள் பதிவாகியுள்ளன.

பொதுமக்களிடம் பெறப்பட்ட புகார்களின் அடிப்படையில் இந்தூர் குற்றத்தடுப்புப் பிரிவு காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மோசடிக்கு பயன்படுத்தப்பட்ட தொலைபேசி எண்கள், வங்கி கணக்கு விவரங்கள் மற்றும் டிஜிட்டல் ஆதாரங்களை அடிப்படையாகக் கொண்டு சைபர் குற்றவாளிகளைப் பிடிக்கும் நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. மேலும், அடையாளம் தெரியாத போலி நபர்கள் மற்றும் அறக்கட்டளைகளின் பெயரில் வரும் அழைப்புகளை நம்பி முன்பணம் செலுத்த வேண்டாம் என மக்களுக்குக் காவல்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.

இந்தச் செய்தியைப் பகிரவும்:

வாட்ஸ்அப் சேனலில் உடனுக்குடன் செய்திகளைப் பெறுக!

Join WhatsApp Channel