ஐசிசி டி20 உலகக் கோப்பை 2024 தொடரில் ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி தங்களுடைய முதல் சூப்பர் 8 போட்டியில் ஆப்கானிஸ்தானை 47 ரன்கள் வித்தியாசத்தில் தோற்கடித்தது. ஜூன் 20ஆம் தேதி பார்படாஸ் நகரில் நடைபெற்ற அந்தப் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்தியா 182 ரன்களை இலக்காக நிர்ணயித்தது. அதிகபட்சமாக சூரியகுமார் யாதவ் 53, ஹர்திக் பாண்டியா 32 ரன்கள் எடுத்தனர்.
ஆப்கானிஸ்தான் சார்பில் அதிகபட்சமாக கேப்டன் ரசித் கான் மற்றும் பரூக்கி தலா 2 விக்கெட்டுகள் எடுத்தனர். அதைத்தொடர்ந்து சேசிங் செய்த ஆப்கானிஸ்தான் ஆரம்பம் முதலே இந்தியாவின் தரமான பந்து வீச்சில் அதிரடி காட்ட முடியாமல் சீரான இடைவெளிகளில் விக்கெட்டுகளை இழந்தது. அதனால் 20 ஓவரில் அந்த அணியை 134 ரன்களுக்கு ஆல் அவுட்டாக்கிய இந்தியா சூப்பர் 8 சுற்றையும் வெற்றிகரமாக துவங்கியது.
அரிதான சாதனை:
ஆப்கானிஸ்தானுக்கு அதிகபட்சமாக ஓமர்சாய் 26 ரன்கள் எடுத்த நிலையில் இந்தியா சார்பில் அதிகபட்சமாக ஜஸ்ப்ரித் பும்ரா, அர்ஷ்தீப் சிங் தலா 3 விக்கெட்டுகள் சாய்த்தனர். முன்னதாக இந்தப் போட்டியில் இந்திய பவுலர்களை அதிரடியாக விளையாட முயற்சித்த ஆப்கானிஸ்தான் பேட்ஸ்மேன்கள் அடுத்தடுத்து கேட்ச்களை கொடுத்து ஆட்டமிழந்தனர்.
சொல்லப்போனால் குர்பாஸ், சாசாய், இப்ராஹிம் ஜாட்ரான், குல்பதின் நைப், அசமத்துல்லா ஓமர்சாய், நஜிபுல்லா ஜாட்ரான், முகமது நபி, கேப்டன் ரசித் கான், நூர் அஹ்மத், நவீன்-உல்-ஹக் என அந்த அணியின் 10 பேட்ஸ்மேன்களும் இந்தியாவிடம் கேட்ச் கொடுத்து அவுட்டானார்கள். இதன் வாயிலாக சர்வதேச டி20 கிரிக்கெட்டிலும், டி20 உலகக்கோப்பை வரலாற்றிலும் எதிரணியின் 10 விக்கெட்களையும் கேட்ச்களாக எடுத்த முதல் ஆசிய அணி என்ற அரிதான சாதனையை இந்தியா படைத்துள்ளது.
இதற்கு முன் கடந்த 2022 டி20 உலகக் கோப்பையில் இதே ஆப்கானிஸ்தானுக்கு எதிராக இங்கிலாந்து அணி 10 விக்கெட்டுகளையும் கேட்ச்களாக எடுத்து அந்த அரிதான சாதனையை படைத்திருந்தது. அதன் பின் தற்போது ஆசிய கண்டத்திலிருந்து இந்திய அணி தான் இப்படி 10 விக்கெட்டுகளையும் கேட்ச்களாக எடுத்து வினோதமான சாதனையை படைத்துள்ளது.
பொதுவாக போல்ட், ஸ்டம்பிங், எல்பிடபுள்யூ, ரன் அவுட் போன்ற பல்வேறு வகைகளில் விக்கெட்டுகளை எடுப்பது வழக்கமாகும். ஆனால் இப்போட்டியில் சிறப்பாக பந்து வீசிய இந்திய அணி ஆப்கானிஸ்தானின் 10 பேட்ஸ்மேன்களையும் கேட்ச் கொடுக்க வைத்து இப்படி ஒரு சாதனையை நிகழ்த்தியது ரசிகர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. இதைத் தொடர்ந்து இந்தியா தங்களுடைய அடுத்த போட்டியில் வங்கதேசத்தை ஜூன் 22இல் சந்திக்கிறது.
மேலும் இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள
E7 Tamil Whatsapp Channel-ஐ Follow பண்ணுங்க
Whatsapp Channel Link:-
https://whatsapp.com/channel/0029Va9LGy4FXUuiUvhKXV1S