தமிழக அரசியலில் மாற்றத்தை ஏற்படுத்தும் நோக்கில் எம்.ஜி.ஆர், விஜயகாந்த் வரிசையில் அரசியலுக்குள் நுழைந்தவர் நடிகர் விஜய். இவரது அரசியல் வருகை அனைவரும் எதிர்பார்த்த ஒன்றாக இருந்தாலும், விஜய்யின் செயல் மற்றும் பேச்சுக்கள் அனைத்தும் பிற கட்சிகளை கிலியில் ஆழ்த்தியுள்ளன.
கடந்த பிப்ரவரி மாதம் கட்சி குறித்த அறிவிப்பை வெளியிட்ட நடிகர் விஜய்க்கு இன்னும் ஒரே ஒரு படம் தான் உள்ளது. அதன் பிறகு, முழுநேர அரசியல் தான். ஏற்கனவே, இளைஞர்களின் வாக்குகளை கவர்ந்த விஜய், அதிமுக, திமுகவுக்கு மாற்று சக்தியாக உருவெடுப்பாரா..? என்ற எதிர்பார்ப்புதான் நடுநிலை வாக்காளர்களிடையே எழுந்துள்ளது.
தனித்து போட்டி என்ற முடிவில் அண்ணாமலை தலைமையில் பா.ஜ.க ஒருபுறம் தீவிரமான அரசியலில் ஈடுபட்டு வந்தாலும், விஜய் வந்த உடனே எப்படியாவது கூட்டணியை அமைத்து விட வேண்டியது தான் என்ற முனைப்பில் அதிமுக, நாம் தமிழர் கட்சிகள் ஈடுபட்டு வருகின்றன.
அதேவேளையில், திமுக கூட்டணியில் அண்மை காலமாக அதிருப்தி குரலை வெளிப்படுத்தி வரும் காங்கிரஸ், வாய்ப்பு கிடைத்தால், விஜய்யின் கையை பிடித்து சட்டசபை தேர்தலை எதிர்கொண்டாலும் ஆச்சர்யப் படுவதற்கில்லை என்கின்றனர் அரசியல் நோக்கர்கள்.
இப்படிபட்ட சூழலில் தான் விஜய் தனது கட்சியின் கொடியையும், கட்சிப் பாடலையும் நாளை (ஆக.,22) வெளியிடுகிறார். அவரது கட்சியின் கொடி என்ன கலர் மற்றும் அதில் இடம்பெறப்போகும் சின்னம் என்ன..? என்பது ஆயிரம் டாலர் கேள்வியாகும்.
காரணம், திராவிட மண் என்று சொல்லப்படும் தமிழகத்தில் கருப்பு, சிவப்பு நிறக் கொடிகள் கட்சிகளிடையே பெரும்பாலான நிறமாக இருந்து வருகிறது. அதைத் தவிர்த்தால், நீலம் மற்றும் வெள்ளை நிறத்தில் ஒரு சில கட்சிகள் கொடிகளை கொண்டுள்ளன.
இப்படியிருக்கையில், சிவப்பு, கருப்பு நிறத்தை வைத்து திராவிட கொள்கையுடன் சேர்ந்து நடிகர் விஜய் பயணிக்கப் போறாரா..? அல்லது தனக்கென்று ஒரு பாதையை உருவாக்கி அதில் பயணிக்க விரும்புவாரா..? என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
ஆனால், கட்சி கொடியில் வாகை மலர் இடம்பெறுவது உறுதி என்ற தகவல் மட்டும் கடந்த சில தினங்களாக சமூகவலைதளங்களில் வட்டமடித்துக் கொண்டிருக்கின்றன. வாகை என்றாலே வெற்றி எனப் பொருள்படும்.
அதுபோலவே, விஜய் என்றாலே வெற்றியின் அடையாளம் என்பதை குறிக்கும் வகையில், மஞ்சள் நிறப் பின்னணியில் வாகை மலரை கொடியில் இடம்பெறச் செய்வர் என்று சொல்லப்படுகிறது. அதேவேளையில், போர் யானைகளுடன் கூடிய இருவண்ணக் கொடியாக இருக்கலாம் என்ற தகவல் வெளி வந்துள்ளது.
நாளை கட்சிக் கொடியை வெளியிட்ட பிறகு விஜய் பேசப் போகும் 10 நிமிட உரை, அடுத்த சில நாட்களுக்கு தமிழக அரசியலில் பரபரப்பை உண்டாக்கும் என்பதில் சந்தேகமும் இல்லை. அதேபோல, அவரது பயணம் எதை நோக்கி இருக்கும் என்பதிலும் சிறிது தெளிவு ஏற்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள
E7 Tamil Whatsapp Channel-ஐ Follow பண்ணுங்க
Whatsapp Channel Link:-
https://whatsapp.com/channel/0029Va9LGy4FXUuiUvhKXV1S