INDIAN 7

Tamil News & polling

களக்காடு தலையணையில் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை

25 அக்டோபர் 2024 05:52 AM | views : 72
Nature

நெல்லை:

நெல்லை, தென்காசி, தூத்துக்குடி மாவட்டங்களில் சில நாட்களாக வடகிழக்கு பருவமழை சில இடங்களில் இடி-மின்னலுடனும், சில இடங்களில் சாரல் மழையாகவும் பெய்து வருகிறது.

நெல்லை மாவட்டத்தில் ராதாபுரம் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வந்த நிலையில் நேற்று அங்கு மழை இல்லை. மாறாக வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. மேற்கு தொடர்ச்சி மலையையொட்டி களக்காடு மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று பலத்த மழை பெய்தது. இதனால் களக்காடு தலையணையில் தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளது. தொடர்ந்து அந்த பகுதியில் மழை பெய்து கொண்டே இருப்பதால் பாதுகாப்பு காரணமாக சூழல் சுற்றுலா தலமான களக்காடு தலையணையில் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. அதே நேரம் சுற்றுலா பயணிகள் பார்வையிடுவதற்கு அனுமதி வழங்கி களக்காடு வனச்சரக அலுவலர் பிரபாகர் உத்தரவிட்டுள்ளார்.

களக்காடு சுற்று வட்டாரத்தில் அதிகபட்சமாக 9.2 மில்லிமீட்டர் மழை பதிவாகி உள்ளது. மாவட்டத்தின் மற்ற பகுதியில் வானம் மேகமூட்டமாக காட்சியளித்தது. அணைகளை பொறுத்தவரை சேர்வலாறு, பாபநாசம், மணிமுத்தாறு அணைகளின் நீர்பிடிப்பு பகுதிகளில் லேசான சாரல் மழை பெய்தது. பாபநாசத்தில் 3 மில்லிமீட்டரும், சேர்வலாறில் 2 மில்லிமீட்டரும் மழை பெய்துள்ளது. கன்னடியன் கால்வாய் பகுதியில் விட்டு விட்டு சாரல் மழை பெய்தது.

தென்காசி மாவடடத்தில் நேற்று மாவட்டம் முழுவதும் பகலில் வெயில் அடித்தது. பிற்பகலில் வானம் மேகமூட்டமாக காணப்பட்டது. கடனா அணை பகுதியில் மட்டும் 2 மில்லிமீட்டர் மழை பெய்துள்ளது. இதனால் குற்றாலத்தில் அனைத்து அருவிகளிலும் தண்ணீர் மிதமாக கொட்டி வருகிறது. அதில் சுற்றுலா பயணிகள் குளித்து மகிழ்கின்றனர்.

தூத்துக்குடி மாவட்டத்தில் ஸ்ரீவைகுண்டம் மற்றும் அதன் சுற்றுவட்டாரத்தில் மட்டும் பரவலாக மழை பெய்தது. அங்கு 9 மில்லிமீட்டர் மழை பதிவாகி உள்ளது. ஓட்டபிடாரத்தில் 2 மில்லி மீட்டரும், தூத்துக்குடியில் 1 மில்லிமீட்டரும் மழை பெய்துள்ளது.

Like
0
    Dislike
0



WhatsApp Share JOIN IN WHATSAPP WhatsApp Share




Whatsaap Channel


உங்கள் கருத்து

சமீபத்திய செய்திகள்

பிரபலமான செய்திகள்