Tamil News & polling
எடப்பாடி தலைமையிலான அதிமுக எம்எல்ஏக்கள் ஆலோசனை கூட்டத்தை செங்கோட்டையன் நேற்று மீண்டும் புறக்கணித்தார். அதன் எதிரொலியாக செங்கோட்டையனின் எம்எல்ஏ மற்றும் கட்சி பதவிகளை பறிக்க எடப்பாடி தரப்பு திட்டமிட்டுள்ளதாக வெளியாகி வரும் தகவல்களால் அதிமுகவில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. தமிழக சட்டமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் கடந்த மார்ச் 14ம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்நிலையில், தமிழக சட்டப்பேரவை தலைவர் அப்பாவு மீது நம்பிக்கை இல்லா தீர்மானம் ஒன்றை பேரவை செயலரிடம் எதிர்க்கட்சி துணை தலைவர் ஆர்.பி.உதயகுமார் கடந்த ஜனவரி மாதம் வழங்கி இருந்தார். இதற்கிடையே, கடந்த 14, 15-ம் தேதிகளில் பொது பட்ஜெட், வேளாண் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டன. இந்த நிலையில், ஆர்.பி.உதயகுமார் வழங்கிய அந்த தீர்மானம் நேற்று எடுத்துக் கொள்ளப்படும் என்று அலுவல் ஆய்வு குழு கூட்டத்தின் முடிவில் சபாநாயகர் அப்பாவு தெரிவித்தார்.
அதன்படி, பேரவை தலைவருக்கு எதிரான நம்பிக்கை இல்லா தீர்மானம் மீதான வாக்கெடுப்பு நேற்று நடைபெற்றது. இதுதொடர்பாக நேற்று காலை தலைமை செயலகத்தில் உள்ள எதிர்க்கட்சி தலைவர் அறையில் எடப்பாடி பழனிசாமி சட்டமன்ற உறுப்பினர்களுடன் ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனை கூட்டத்தை மீண்டும் செங்கோட்டையன் புறக்கணித்தார். முன்னதாக பட்ஜெட் தாக்கல், வேளாண் பட்ஜெட் தாக்கல் அன்று நடைபெற்ற எம்எல்ஏக்கள் கூட்டத்திலும் செங்கோட்டையன் பங்கேற்கவில்லை. அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக, அக்கட்சியின் மூத்த தலைவர்களின் ஒருவரான முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் தொடர்ந்து செயல்பட்டு வருவது அதிமுகவில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தி வருகிறது.
ஒவ்வொரு நாளும் சட்டமன்றம் கூடுவதற்கு முன்னால் காலை 9மணிக்கு எதிர்கட்சி தலைவர் அறையில் கட்சி எம்எல்ஏக்களுடன் ஆலோசனை நடத்துவது வழக்கம். செங்கோட்டையனுக்கு அதிமுக கொறடா மூலம் தகவல் தெரிவிக்கப்படும். ஆனால், அவருக்கு 3 நாட்களாக தொடர்ந்து தகவல் தெரிவிக்கப்பட்டும், ஆலோசனை கூட்டத்தில் அவர் பங்கேற்காமல் தொடர்ந்து புறக்கணித்து வருகிறார். சட்டமன்றத்தில் தொடர்ந்து தனி அணியாக அவர் செயல்பட்டு வருகிறார். மேலும், அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட ஓ.பன்னீ்ர்செல்வம், சசிகலா, டிடிவி.தினகரன் ஆகியோருடனும் செங்கோட்டையன் தொடர்பில் இருப்பதாகவும் கூறப்படுகிறது.
இவருக்கு ஆதவாரவாக ஓபிஎஸ்சும் பேட்டி அளித்து வருகிறார். மேலும், சட்டமன்ற கூட்டத் தொடரில், செங்கோட்டையன் நடவடிக்கையால் கடுப்பாகிப் போன எடப்பாடி பழனிசாமி, செங்கோட்டையன் ஏன் இப்படி புறக்கணிக்கிறார் என அவரிடமே கேட்டுத் தெரிந்து கொள்ளுங்கள் என பத்திரிகையாளர்களிடம் அதிருப்தியை வெளிப்படுத்தினார். அத்துடன் அதிமுக முன்னாள் அமைச்சர் வைகைசெல்வன், செங்கோட்டையனின் இந்த நடவடிக்கைகள் அநாகரீகமானது என்றார். இது ஒருபுறம் இருக்க, பிரதமர் நரேந்திர மோடியை வானளாவ புகழ்ந்து பேசினார் செங்கோட்டையன்.
சென்னையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் செங்கோட்டையன் இப்படி பேசியது ஒட்டுமொத்த அதிமுக நிர்வாகிகளையும் கொந்தளிக்க வைத்துள்ளதாக கூறப்படுகிறது. கூட்டணி விவகாரத்தில் அதிமுகவை பாஜ தொடர்ந்து இழிவுபடுத்தி வரும் நிலையில் பிரதமர் மோடியை செங்கோட்டையன் இப்படி பாராட்டிப் பேசிய பின்னரும் எப்படி பொறுமையாக இருக்க முடியும்? என எடப்பாடி பழனிசாமியிடம் அக்கட்சியின் மூத்த நிர்வாகிகள் கோபத்தை கொட்டி வருதாகவும் தகவல் வெளியாகி வருகிறது. இதுபோன்ற செயல்பாடுகளால் செங்கோட்டையன் மீது நடவடிக்கை எடுக்க எடப்பாடி பழனிசாமி தயாராகி வருவதாக கூறப்படுகிறது.
முதல் கட்டமாக செங்கோட்டையனின் ஈரோடு புறநகர் மேற்கு மாவட்ட செயலாளர் பதவி மற்றும் கட்சியின் அமைப்புச் செயலாளர் பதவி ஆகியவை பறிக்கவும் எடப்பாடி பழனிசாமி திட்டமிட்டுள்ளதாக அதிமுக வட்டாரத்தில் பேசப்பட்டு வருகிறது. மேலும், செங்கோட்டையனின் கட்சி பதவி மற்றும் எம்எல்ஏ பதவியையும் பறிக்க எடப்பாடி பழனிச்சாமிக்கு மற்ற மூத்த நிர்வாகிகள் நெருக்கடி கொடுத்து வருகின்றனர். அவ்வாறு நடவடிக்கை எடுக்கும்பட்சத்தில், தொடர்ந்து இதுபோன்ற நடவடிக்கையில் ஈடுபட்டால் செங்கோட்டையன் தனது எம்எல்ஏ பதவியை இழப்பார் அல்லது ஓபிஎஸ் போன்று தனித்து செயல்படும் சூழ்நிலை ஏற்படும். அதிமுக மூத்த தலைவர்களின் ஒருவரான செங்கோட்டையின் மீது நடவடிக்கை எடுக்க எடப்பாடி தரப்பு தயாராகி வருவது அதிமுக வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.
அதிமுக ஏற்கனவே பல அணிகளாக பிரிந்த நிலையில், தற்போது செங்கோட்டையன் நடவடிக்கையானது எடப்பாடி பழனிச்சாமிக்கு கடும் நெருக்கடியை ஏற்படுத்தி வருகிறது. இந்நிலையில், சட்டசபையில் கட்சியின் மூத்த நிர்வாகிகள் செங்கோட்டையனிடம் ஏற்கனவே சமாதான பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால் அவர் அதை ஏற்கவில்லை. இந்நிலையில், நேற்று மீண்டும் அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டத்தை செங்கோட்டையன் புறக்கணித்தது மேலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனால் அவைக்கு வந்த செங்கோட்டையனிடம் அவரது இருக்கைக்கு அருகில் சென்று கடம்பூர் ராஜூ, உடுமலை ராதாகிருஷ்ணன் ஆகியோர் சமாதான பேச்சுவார்த்தை நடத்தினர். தொகுதி சம்பந்தமான கேள்விகளை எழுப்பிய பின்பு செங்கோட்டையின் எழுந்து சென்றார். அவரிடம் எஸ்.பி.வேலுமணி, தங்கமணி, கே.பி.முனுசாமி உள்ளிட்டோர் சமாதான பேச்சு வார்த்தை நடத்தியது குறிப்பிடத்தக்கது.

விஜய் Vijay DMK Chennai சென்னை திமுக TVK தவெக அண்ணாமலை Annamalai அதிமுக பாஜக கனமழை BJP எடப்பாடி பழனிசாமி Tamil Nadu தமிழக வெற்றிக் கழகம் TTV Dhinakaran திருமாவளவன் ADMK AIADMK டிடிவி தினகரன் AMMK Thirumavalavan MK Stalin மு.க.ஸ்டாலின் அன்புமணி ராமதாஸ் Anbumani Ramadoss PMK சீமான் செங்கோட்டையன் தமிழ்நாடு Edappadi Palaniswami Sengottaiyan Seeman Congress சட்டசபை தேர்தல் வடகிழக்கு பருவமழை பாமக முக ஸ்டாலின் Nellai Tamilaga Vettri Kazhagam உதயநிதி ஸ்டாலின் நெல்லை தமிழகம் Thoothukudi காங்கிரஸ்