திருச்செந்தூர் கோவில் கடற்கரையில் பக்தர்கள் தங்க தடையில்லை - மாவட்ட எஸ்.பி. தகவல்
4 months ago
08 நவம்பர் 2025 01:00 PM | views : 225
முருக பெருமானின் அறுபடை வீடுகளில் 2ம் படை தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூரில் அமைந்துள்ளது. இந்த முருகன் கோவிலுக்கு தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வழிபாடு நடத்தி செல்கின்றனர். மேலும், பக்தர்கள் பலரும் இரவு நேரத்தில் கோவில் முன் கடற்கரையில் தங்கி மறுநாள் காலை கோவிலில் வழிபாடு நடத்திவிட்டு செல்வது வழக்கம்.
இதனிடையே, திருச்செந்தூர் கடற்கரை பகுதியில் குடும்பத்துடன் தங்கி இருந்த பக்தர்களை நேற்று இரவு போலீசார் அப்புறப்படுத்தினர். மேலும், இரவு 10 மணிமுதல் அதிகாலை 4 மணிவரை கோவில் முன்பு கடற்கரையில் தங்க அனுமதியில்லை என்று ஒலிபெருக்கி மூலம் அறிவுத்தப்பட்டது. பக்தர்களிடம் அதிக அளவில் திருட்டு சம்பவங்கள் நடைபெறுவதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக கோவில் நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இந்த செயலுக்கு பக்தர்கள் தரப்பில் கண்டனம் தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில், திருச்செந்தூர் கோவில் கடற்கரையில் பக்தர்கள் தங்க தடையில்லை என்று தூத்துக்குடி மாவட்ட எஸ்.பி. ஆல்பர்ட் ஜான் விளக்கம் அளித்துள்ளார். வடகிழக்கு பருவமழை, திடீர் கனமழையின் காரணமாக அந்த நேரத்தில் மட்டும் பொதுமக்கள் பாதுகாப்பை கருத்தில் கொண்டு கடற்கரையில் தங்க சில கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டதாக அவர் தெரிவித்துள்ளார்.