சிறுமியிடம் பாலியல் வன்புணர்ச்சியில் ஈடுபட்ட தொழிலாளிக்கு 20 ஆண்டுகள் சிறை
4 months ago
21 நவம்பர் 2025 04:44 PM | views : 228
திருவண்ணாமலை மாவட்டம் போளூர் தாலுகா பேட்டை கிராமம் வள்ளுவர் காலனி பகுதியை சேர்ந்தவர் குமார் (40 வயது). இவர், கடந்த 2016-ம் ஆண்டு ஜனவரி மாதம், 6 வயதுடைய சிறுமியிடம் பாலியல் வன்புணர்ச்சியில் ஈடுபட்டு உள்ளார். இதுகுறித்து சிறுமியின் பெற்றோர் போளூர் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தனர். அதன்பேரில் போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி குமாரை கைது செய்தனர்.
இதுதொடர்பான வழக்கு விசாரணை திருவண்ணாமலை மாவட்ட ஒருங்கிணைந்த கோர்ட்டு வளாகத்தில் உள்ள போக்சோ வழக்குகளுக்கான சிறப்பு விசாரணை கோர்ட்டில் நடைபெற்று வந்தது.
இந்த நிலையில் நேற்று இவ்வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது வழக்கை விசாரித்த நீதிபதி காஞ்சனா தீர்ப்பு கூறினார். அதில், சிறுமியிடம் பாலியல் வன்புணர்ச்சியில் ஈடுபட்ட தொழிலாளி குமாருக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.10 ஆயிரம் அபராதமும் விதித்து உத்தரவிட்டார். பின்னர் அவரை போலீசார் வேலூர் மத்திய சிறையில் அடைத்தனர்.