கத்தாரில் ஆசியக் கோப்பை 2025 ரைசிங் ஸ்டார்ஸ் டி20 கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. அத்தொடரில் நவம்பர் 21ஆம் தேதி நடைபெற்ற முதல் அரையிறுதிப் போட்டியில் இந்தியாவை சூப்பர் ஓவரில் தோற்கடித்த வங்கதேசம் இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றது. மறுபுறம் போராடி தோற்ற இந்தியா பரிதாபமாக வீட்டுக்கு கிளம்பியது.
அப்போட்டியில் டாஸ் வென்ற இந்தியா முதலில் பந்து வீசுவதாக அறிவித்தது. அதைத் தொடர்ந்து களமிறங்கிய வங்கதேசம் 20 ஓவரில் 194/6 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக ரகுமான் சோகன் 65 (46), மெஹீரோப் 48* (18), யாசிர் அலி 17* (9) ரன்கள் எடுத்தனர். இந்தியா ஏ அணிக்கு அதிகபட்சமாக குர்ஜப்நீத் சிங் 2 விக்கெட்டுகளை எடுத்தார்.
அடுத்து விளையாடிய இந்தியாவும் 20 ஓவரில் 194/6 ரன்கள் எடுத்ததால் போட்டி சமனில் முடிந்தது. அதிகபட்சமாக வைபவ் சூரியவன்சி 38 (15), பிரியான்ஸ் ஆர்யா 44 (23), கேப்டன் ஜிதேஷ் சர்மா 33 (23), நேஹல் வதேரா 32* (29) ரன்கள் எடுத்தும் வெற்றி காண முடியவில்லை. இறுதியில் வீசப்பட்ட சூப்பர் ஓவரில் நல்ல ஃபார்மில் இருக்கும் சூரியவன்சி, பிரியான்ஸ் ஆர்யா விளையாடுவார்கள் என்று எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால் அவருக்கு பதில் களமிறங்கிய கேப்டன் ஜித்தேஷ் சர்மா, அசுட்டோஸ் சர்மா முதல் 2 பந்துகளில் டக் அவுட்டாகி சொதப்பினார்கள். அடுத்து விளையாடிய வங்கதேசம் இந்திய பவுலர் சூயஸ் வீசிய ஒய்ட் பந்தால் 1/1 ரன் எடுத்து எளிதாக வென்றது. இந்நிலையில் இப்போட்டியில் சூரியவன்சி, பிரியான்ஸ் ஆர்யா ஆகியோரை களமிறக்காமல் இந்தியா தோற்றதற்கான காரணம் பற்றி கேப்டன் ஜித்தேஷ் பேசியது பின்வருமாறு.
“கிரிக்கெட்டின் இந்த நல்ல ஆட்டத்தில் எங்களுக்கு நல்ல பாடம் கிடைத்தது. ஒரு சீனியராக நான் இப்போட்டியை முடித்திருக்க என்பதால் தோல்விக்கான பொறுப்பை ஏற்றுக் கொள்கிறேன். இவை அனைத்தும் தோற்பதைப் பற்றியதல்ல பாடத்தைக் கற்பதைப் பற்றியதாகும். இதே வீரர்கள் ஒரு நாள் இந்தியாவுக்காக உலகக் கோப்பையை வென்று கொடுப்பார்கள் என்பது உங்களுக்குத் தெரியாது. அவர்கள் திறமையின் அடிப்படையில் வானைத் தொடுகிறார்கள்”
“என்னுடைய விக்கெட் திருப்பு முனையாக அமைந்தது. அழுத்தத்தை எப்படி கையாள்வது என்பது எனக்குத் தெரியும் வங்கதேசம் நன்றாக பந்து வீசினார்கள். 19வது ஓவரை வீசியவருக்கு பாராட்டுக்கள். 20 ஓவர்களும் நாங்கள் ஆட்டத்தில் இருந்ததால் யாரையும் குறை சொல்ல முடியாது. சூர்யவன்சி, பிரியான்ஸ் ஆகியோர் பவர்பிளே ஓவர்களில் மாஸ்டர்கள். ஆனால் டெத் ஓவர்களில் நான், அசுட்டோஸ், ரமன்தீப் ஆகியோர் அடிக்கக்கூடியவர்கள். அதை அடிப்படையாக வைத்து சூப்பர் ஓவரில் களமிறங்கும் முடிவை அணியும் நானும் எடுத்தோம். அற்புதமாக விளையாடிய சூர்யவன்சிக்கு நல்ல வருங்காலம் உள்ளது” என்று கூறினார் .