INDIAN 7

Tamil News & polling

30 வருடங்களாக போட்டியின்றி பஞ்சாயத்து தலைவராக தேர்வு செய்யப்படும் தேவர் வம்சம்!

05 அக்டோபர் 2021 12:19 PM | views : 69
Nature

சாயல்குடி: கடலாடி அருகே எம்.கரிசல்குளம் பஞ்சாயத்து தலைவர் பதவிக்கு 30 வருடங்களுக்கும் மேலாக போட்டியின்றி, தலைவர் தேர்ந்தெடுக்கப்பட்டு வருவது ஒற்றுமைக்கான எடுத்துக்காட்டாக விளங்கி வருகிறது. ராமநாதபுரம் மாவட்டம், கடலாடி ஒன்றியம், எம்.கரிசல்குளம் பஞ்சாயத்தில் எம்.கரிசல்குளம், எம்.தனியங்கூட்டம், பி.உசிலங்குளம் ஆகிய கிராமங்கள் உள்ளன. 6 வார்டுகள் உள்ள இக்கிராமங்களில் சுமார் 1,500க்கும் மேற்பட்ட குடும்பங்கள் உள்ளன. இங்கு இதுவரை பஞ்சாயத்து தலைவர் பதவிக்கு போட்டியின்றி தேர்வு நடந்து வருகிறது. இங்குள்ள கிராம தெய்வங்களான வில்வநாதன், வனப்பேச்சியம்மன், நொண்டிகருப்பசாமி ஆகிய கோயில்களில் கிராம மக்கள் சார்பாக சிறப்பு வழிபாடு செய்யப்பட்டு கிராமக்கூட்டம் போடப்படுகிறது. இதில் பஞ்சாயத்து தலைவராக யாரை தேர்ந்தெடுக்கலாம் என ஒற்றுமையாக பேசி முடிவெடுத்து அறிவித்து வருவது தற்போது வரை தொடர்கிறது.

73வது இந்திய அரசியலமைப்பு சட்டத்திருத்தம் 1993ல் கொண்டு வரப்பட்டதற்கு முன்னதாக தவசித்தேவர், சண்முகதேவர் ஆகியோரை பஞ்சாயத்து தலைவராக கிராம மக்கள் போட்டியின்றி தேர்வு செய்துள்ளனர். அதன்பிறகு தமிழ்நாடு ஊராட்சிகள் சட்டம் 1994ல் இயற்றப்பட்ட பிறகு முதன் முதலாக எம்.கரிசல்குளத்தை சேர்ந்த பாண்டித்தேவர் போட்டியின்றி பஞ்சாயத்து தலைவராக தேர்ந்தெடுத்துள்ளனர். 5 வருடம் பதவி காலம் முடிந்த பிறகு அதே கிராமத்தைச் சேர்ந்த காளிமுத்து போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டார்.


அதன்பிறகு இட ஒதுக்கீடு முறையில் பெண்ணிற்கு ஒதுக்கப்பட்டதால் பாண்டித்தேவரின் மகள் உத்தரவள்ளியும், காளிமுத்து மகள் சந்தனமாரியும் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டு 10 வருடங்கள் தலைவராக பதவி வகித்தனர். மீண்டும் பாண்டித்தேவர் தேர்ந்தெடுக்கப்பட்டு 2016ல் பதவிக்காலம் முடியும் வரை தலைவராக இருந்துள்ளார். 2019ல் வார்டு மறுவரையறைக்கு பிறகு பாண்டித்தேவர் மகன் கருப்பசாமி போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டு 2020 ஜனவரியில் தலைவராக பதவி ஏற்றார். இவர் உடல்நிலை பாதிக்கப்பட்டு 2020 அக்டோபர் மாதம் இறந்தார். இதனால் பஞ்சாயத்து தலைவர் பதவி காலியாக இருந்தது.

இந்நிலையில் தற்போது எம்.கரிசல்குளம் பஞ்சாயத்திற்கு தலைவராக பாண்டித்தேவரின் மருமகள் வில்வசாந்தி போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டதாக மாவட்ட தேர்தல் அதிகாரியும், கலெக்டருமான சந்திரகலா அறிவித்தார். பஞ்சாயத்து தலைவர் பதவி ஏற்பு மற்றும் முதல் கூட்டம் அக்.20ம் தேதி என அறிவிக்கப்பட்டுள்ளதால், அன்று எம்.கரிசல்குளம் பஞ்சாயத்து தலைவராக வில்வசாந்தி பதவி ஏற்க உள்ளார். மேலும் எம்.கரிசல்குளம் பஞ்சாயத்திற்கு தலைவரை போட்டியின்றி தேர்ந்தெடுப்பது போன்று, துணை தலைவர் மற்றும் வார்டு உறுப்பினர்களும் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

Like
0
    Dislike
0



WhatsApp Share JOIN IN WHATSAPP WhatsApp Share




Whatsaap Channel


உங்கள் கருத்து

சமீபத்திய செய்திகள்

பிரபலமான செய்திகள்