பெரியார் சிலையை உடைக்க வேண்டும் என்று பேசிய கனல் கண்ணன் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில் தற்போது அவர் தலைமறைவாகி உள்ளார்.
இந்துக்களின் உரிமை மீட்பு பிரச்சாரப் பயணம் என்ற பிரச்சார பயணத்தில் இந்து முன்னணி அமைப்பின் கலை இலக்கிய மாநில செயலாளர் கனல் கண்ணன் பேசிய சில விஷயங்கள் தமிழ்நாடு முழுக்க பரபரப்பை ஏற்படுத்தியது. சினிமா சண்டை பயிற்சியாளர் கனல் கண்ணன், இந்து முன்னணி அமைப்பின் கலை இலக்கிய மாநில செயலாளர் பொறுப்பில் இருக்கிறார்.
இந்து முன்னணி நிகழ்ச்சிகள் பலவற்றில் இவர் பேசி இருக்கிறார். இந்த நிலையில்தான் நேற்று முதல்நாள் மதுரவாயலில் நடைபெற்ற இந்து முன்னணி நிகழ்ச்சியில் பெரியாருக்கு எதிராக கடுமையான சில கருத்துக்களை கனல் கண்ணன் வைத்தார்.
ஸ்ரீரங்கத்தில் இருக்கும் பெரியார் சிலையை உடைக்க வேண்டும் என்று கனல் கண்ணன் பேசி இருந்தார்.
அவர் தனது பேச்சில், ஸ்ரீரங்கம் கோவிலுக்கு முன்பாக பெரியார் சிலை இருக்க கூடாது. கடவுள் இல்லை என்று சொன்னவன் சிலை எதற்கு கோவிலுக்கு முன் இருக்க வேண்டும். அவரின் சிலையை இடிக்க வேண்டும். ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலில் லட்சக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்கின்றனர். அவர்கள் தரிசனம் முடித்து இவரின் சிலையை பார்ப்பது சரியாக இருக்காது. அவரின் சிலையை உடைத்தால் அதுதான் உண்மையான எழுச்சி, என்று கனல் கண்ணன் கூறினார்.
இவரின் பேச்சு இணையம் முழுக்க பெரிய அளவில் சர்ச்சனையாது. கனல் கண்ணனுக்கு எதிராக திமுகவினரும், திகவினரும் கடும் விமர்சனங்களை வைத்தனர். கனல் கண்ணனுக்கு எதிராக தந்தை பெரியார் திராவிடர் கழத்தை சேர்ந்தவர்கள் சென்னை காவல் ஆணையரிடம் புகார் அளித்தனர். இதையடுத்து கலவரத்தை தூண்டுதல்,. இரண்டு பிரிவிற்கு இடையில் மோதலை ஏற்படுத்தும் வகையில் பேசுதல் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது.
கனல் கண்ணன் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில் தற்போது அவர் தலைமறைவாகி உள்ளார். போலீசார் இவரை கைது செய்ய திட்டமிட்டுள்ள நிலையில் அவர் தனது வீட்டில் இருந்து வெளியேறி தலைமறைவாகிவிட்டார். அவரின் வீட்டிற்கு போலீசார் சென்ற நிலையில்,வீட்டில் இருந்த அவரின் குடும்ப உறுப்பினர்கள்.. கனல் கண்ணன் இங்கே இல்லை. அவர் எங்கே சென்றார் என்று தெரியவில்லை என்று தெரிவித்து உள்ளனர்.