‘பாமகவில் நடக்கும் குழப்பங்களுக்கு ஸ்டாலினும், அவரது மருமகனும்தான் காரணம்’ - அன்புமணி ராமதாஸ்
தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலையொட்டி அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி சேலம் மாவட்டத்தின் இன்று தனது இறுதிகட்ட பிரசாரத்தில் ஈடுபட்டார். இதில் கூட்டணிக் கட்சித் தலைவரான அன்புமணி ராமதாஸும் கலந்துகொண்டு பிரசாரம் செய்தார்.
அப்போது பேசிய அன்புமணி ராமதாஸ்,
“அதிமுக தலைமையிலான வெற்றிக் கூட்டணியான என்டிஏ கூட்டணிக்கு தலைமை வகிக்கும் இபிஎஸ் இன்னும் 2 மாதத்தில் முதலமைச்சராகப் பொறுப்பேற்க உள்ளார். அவர் ஒரு விவசாயி, சேலம் மாவட்டத்தின் மண்ணின் மைந்தன் என்பது எல்லோருக்கும் பெருமை. தமிழ்நாட்டிற்கு விடுதலை கிடைக்க வேண்டும். இந்த நரக ஆட்சிக்கு உங்கள் மூலம், தாய்மார்கள், பெண்கள் மூலம் விடிவுகாலம் வர வேண்டும்.
62 ஆயிரம் வழக்குகள் பெண்களுக்கு எதிரான குற்றங்கள்…அதில் 27 ஆயிரம் வழக்குகள் போக்சோ வழக்குகள். 44 ஆயிரம் வழக்குகள் பெண்களுக்கு எதிரான குற்றங்கள். இப்படி ஒரு ஆட்சியா..? ஆனால், முதலமைச்சருக்கு என்ன நடக்கிறது என்பதே தெரியவில்லை. ஏதோ வருகிறார் விளம்பரப் படத்தில் நடக்கிறார். வீட்டிற்குப் போகிறார். ஏதோ எழுதிக் கொடுக்கிறார்கள், அதை படிக்கிறார்.
ஸ்டாலின் ஆட்சியில் ஒரு பக்கம் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை. இன்னொரு பக்கம் நாடாளுமன்றத்தில் மகளிர் இடஒதுக்கீட்டு சட்ட நகலை ஒரு எரிக்கின்றார் என்றால் இதை விட தேச துரோகச் செயல் வேறு இருக்க முடியும்..? அவருக்கு பெண்கள் மீது எவ்வளவு வன்மம். பெண்கள் எல்லாம் படிக்க கூடாது, வேலைக்கு போகக்கூடாது, முன்னேறக்கூடாது, எம்.எல்.ஏ.க்கள், எம்பியாக வரக் கூடாது என்று நினைக்கிறார்.
பிரேமலதா திருப்பரங்குன்றத்தில் தீபம் ஏற்றியே தீருவோம் என்று சொல்கிறார். நாங்களும் அதைத்தான் சொல்கிறோம். கடந்த ஒராண்டு காலம் பாமகவில் நடக்கிற குழப்பங்களுக்கு ஸ்டாலினும், அவரது மருமகன் சபரீசனும்தான் காரணம். இவர்கள் மீண்டும் வெற்றி பெற வேண்டும் என்பதற்காக எங்கள் குடும்பத்தில் திட்டமிட்டு குழப்பம் செய்திருக்கிறார்கள்.
அதை எல்லாம் மக்கள் பார்த்துக்கொண்டு இருக்கிறார்கள். இந்த கேடு கெட்ட ஊழல் ஆட்சியை அகற்றுங்கள். இபிஎஸ்ஸை முதலமைச்சராகக் கொண்டு வாருங்கள்” எனப் பேசினார்.
வாட்ஸ்அப் சேனலில் உடனுக்குடன் செய்திகளைப் பெறுக!
Join WhatsApp Channel