பிளஸ் 2 மாணவியை கர்ப்பமாக்கிய வாலிபர் மீது போக்சோ வழக்கு பதிவு
சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே காடையாம்பட்டியை சேர்ந்த 17 வயது சிறுமி அப்பகுதியில் உள்ள ஒரு பள்ளியில் பிளஸ் 2 முடித்துவிட்டு வீட்டில் இருந்து வருகிறார். இந்நிலையில், சிறுமியின் வயிறு கர்ப்பம் அடைந்தது போல் திடீரென பெரியதாக ஆனதால் அவரது தாயார் ஓமலூர் அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றார். அங்கு சிறுமியை மருத்துவர்கள் பரிசோதனை செய்தபோது, சிறுமி 6 மாத கர்ப்பமாக இருப்பது தெரிய வந்தது.
இதைக்கேட்டு அதிர்ச்சி அடைந்த பெற்றோர், இது தொடர்பாக ஓமலூர் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தனர். அதன்பேரில் இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) கலையரசி தலைமையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
விசாரணையில், கடந்த 6 மாதத்திற்கு முன்பு சிறுமியின் வீட்டிற்கு பக்கத்தில் வசிக்கும் சாமிதுரை (30 வயது) என்ற வாலிபர் சிறுமியிடம் ஆசைவார்த்தை கூறி, சிறுமியின் பெற்றோர் இல்லாதபோது கட்டாயப்படுத்தி நெருக்கமாக இருந்துள்ளார். இதன் காரணமாக சிறுமி கர்ப்பம் அடைந்திருப்பது தெரியவந்தது.
இதையடுத்து சிறுமியை கர்ப்பமாக்கிய சாமிதுரை மீது போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
வாட்ஸ்அப் சேனலில் உடனுக்குடன் செய்திகளைப் பெறுக!
Join WhatsApp Channel