வடக்கு சைப்ரஸில் 270 பயணிகளுடன் சென்ற கப்பல் கவிழ்ந்து விபத்து - மீட்பு பணிகள் தீவிரம்!
வடக்கு சைப்ரஸில் 270 பயணிகளுடன் சென்ற கப்பல் கடலுக்கு நடுவே கவிழ்ந்து விபத்துக்குள்ளானதாக துருக்கிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
கைரேனியா கடற்கரையிலிருந்து துருக்கியின் தாசுசு துறைமுகத்திற்கு புறப்பட்ட சிறிது நேரத்திலேயே சுமார் இரண்டு கிலோமீட்டர் தூரத்தில் கப்பல் கவிழ்ந்துள்ளது.
கப்பல் கவிழ்ந்த உடனேயே துருக்கிய சைப்ரஸ் கடலோரக் காவல் படகுகள் மீட்புப் பணிக்காக சம்பவ இடத்திற்கு விரைந்தன. மேலும் ஒரு ஹெலிகாப்டரும் மீட்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இதில் 159 பயணிகள் மீட்கப்பட்டுள்ளதாகவும், மற்ற 99 பயணிகள் மற்றும் ஊழியர்கள் குறித்து இன்னும் தெரியவில்லை என்று கைரேனியா நகர மேயர் முராத் சென்குல் தெரிவித்துள்ளார்.
இப்பகுதியில் கடந்த சில நாட்களாகவே மோசமான வானிலை நிலவி வருவதால், இந்த விபத்து ஏற்பட்டிருக்கலாம் என அஞ்சப்படுகிறது. மீட்புப் பணிகள் தற்போது தீவிரமாக நடைபெற்று வருகின்றன.
வாட்ஸ்அப் சேனலில் உடனுக்குடன் செய்திகளைப் பெறுக!
Join WhatsApp Channel