ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் இயக்குநர் நெல்சன் மனைவியிடம் விசாரணை!

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் தேடப்பட்டு வரும் ரௌடியிடம் இயக்குநர் நெல்சனின் மனைவி தொடர்புகொண்டு பேசியதாகக் கூறப்படுகிறது.சென்னையில், கடந்த ஜூலை 5 ஆம் தேதியில் பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழ்நாடு மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் வெட்டி, படுகொலை செய்யப்பட்டார்.

இந்த கொலை வழக்கில், இதுவரையில் பலர் கைது செய்யப்பட்டுள்ளனர். குறிப்பாக, ஆற்காடு சுரேஷின் தம்பி பொன்னை பாலு, ராமு, திருவேங்கடம், திருமலை, செல்வராஜ், மணிவண்ணன், சந்தோஷ், அருள், கோகுல், விஜேஷ், சிவசக்தி, ஹரிதரன், அஞ்சலை, மலர்க்கொடி உள்ளிட்டோருக்கு இந்த கொலை சம்பவத்தில் தொடர்பிருப்பதாகக் கூறப்படுகிறது. சீசிங் ராஜா, சம்போ செந்தில் உள்ளிட்ட பல பயங்கர ரௌடி கும்பல்கள்தான், ஒன்றாக சேர்ந்து இந்த கொலை சம்பவத்திற்கு திட்டம் தீட்டியுள்ளனர்.


இந்த கொலை வழக்கில் தொடர்புடைய சீசிங் ராஜா, சம்போ செந்தில் ஆகியோர் தலைமறைவாக இருக்கின்றனர். சம்போ செந்திலின் நெருங்கிய கூட்டாளியான மொட்டை கிருஷ்ணனும் தலைமறைவாக உள்ளார்.இந்த நிலையில், ரௌடி மொட்டை கிருஷ்ணனுடன் செல்போன் மூலம் தொடர்பில் இருந்ததாகக் கூறி, இயக்குனர் நெல்சன் திலீப் குமாரின் மனைவியான மோனிஷாவிடம் காவல்துறையினர் விசாரணை நடத்தியதாக கூறப்படுகிறது.


இதனையடுத்து, மோனிஷாவை நேரில் வரவழைத்த காவல்துறையினர், மொட்டை கிருஷ்ணனிடம் எதற்காக பேசினீர்கள்? எத்தனை முறை பேசி இருக்கிறீர்கள்? என்ன விவகாரம் குறித்து பேசப்பட்டது? என்றெல்லாம் கேள்வி எழுப்பியதாகக் கூறப்படுகிறது.

இந்த நிலையில், மொட்டை கிருஷ்ணன் வழக்கறிஞர் என்பதால்தான், தங்கள் வழக்குகள் தொடர்பாக, அவரிடம் பேச வேண்டியிருந்தது; மற்றபடி அவருக்கும் தங்களுக்கும் எந்த தொடர்பும் கிடையாது என மோனிஷா விளக்கம் அளித்ததாகக் கூறப்படுகிறது.மேலும், நெல்சனிடமும் விசாரணை நடத்த திட்டமிடப்பட்டிருப்பதாகவும் கூறப்படுகிறது.. பகிரவும்:

நிமிடத்திற்கு நிமிடம் செய்திகள்! எங்களது வாட்ஸ்அப் சேனலில் இணையுங்கள்.

Join Channel