Tamil News & polling
வங்கக் கடலில் உருவாகி உள்ள புயல் சின்னம் காரணமாக சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதையொட்டி இந்த 4 மாவட்டங்களிலும் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை விடப்பட்டுள்ளது. ஐ.டி. நிறுவனங்களில் பணிபுரிபவர்கள் வீடுகளில் இருந்தபடியே வேலை செய்யவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இந்த 4 மாவட்டங்களுக்கும் இன்று மிக கனமழைக்கான ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளதால் மழையை எதிர்கொள்ள நேற்று மாலையில் இருந்தே மக்கள் தயாரானார்கள்.
தங்களுக்கு தேவையான பொருட்களை வாங்கி குவிப்பதில் ஆர்வம் காட்டினார்கள். இதனால் பள்ளிகளில் மாலைநேர சிறப்பு வகுப்புகளும் ரத்து செய்யப்பட்டு மாணவ-மாணவிகள் முன்கூட்டியே வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
இந்த நிலையில் நேற்று மாலையில் இருந்தே கனமழைக்கான அறிகுறிகள் தென்பட்டன. சென்னை மற்றும் புறநகர் பகுதிகளிலும், திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மாவட்டங்களிலும் சூறைக்காற்று வீசியது.
பின்னர் இரவில் விட்டு விட்டு மழை பெய்து கொண்டே இருந்தது. பலத்த காற்றும் வீசியது. இப்படி இடி-மின்னலுடன் விடிய பெய்து கொண்டே இருந்தது.
தென் சென்னை, மத்திய சென்னை, வடசென்னை என அனைத்து பகுதிகளிலுமே பலத்த மழை பெய்தது.
இன்று காலையிலும் கனமழை பெய்தது. 'ஆரஞ்சு அலர்ட்' விடுக்கப்பட்டிருந்ததால் காலை 6 மணிக்கு இருள் சூழ்ந்து வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. மழையும் பெய்ய தொடங்கியது.
இந்த மழை சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் சில இடங்களில் பலத்த மழையாக பெய்தது. விட்டு விட்டு பெய்து கொண்டே இருந்த மழை சுமார் 1½ மணிநேரத்துக்கும் மேலாக நீடித்தது.
அதன் பிறகு சற்று ஓய்ந்த மழை மீண்டும் பெய்தது. பகலில் மழை வெளுத்து வாங்கியது. இதனால் தாழ்வான இடங்களில் தண்ணீர் தேங்கியது.
மெட்ரோ ரெயில்கள் பணிகள் நடைபெற்று வரும் இடங்களிலும் மழைநீர் வடிகால் வழியாக தண்ணீர் செல்ல முடியாத இடங்களிலும் தண்ணீர் சூழ்ந்தது.
கோயம்பேடு மெட்ரோ பாலத்துக்கு கீழே பூந்தமல்லி நெடுஞ்சாலையையொட் டிய பகுதியில் தேங்கிய மழைநீரில் வாகனங்கள் ஊர்ந்து சென்றன. அங்கிருந்து பாரிமுனை நோக்கி செல்லும் வழியிலும் பூந்தமல்லி நெடுஞ்சாலையில் சில இடங்களிலும் தண்ணீர் தேங்கி நின்றது.
புரசைவாக்கம் ரித்தட்கன் ரோட்டில் வழக்கம் போல தண்ணீர் தேங்கி நின்றது. ஒவ்வொரு மழைக்கும் இந்த சாலையில் தண்ணீர் தேங்குவது வாடிக்கையான ஒன்றாகும். அதன்படி இன்றும் மழைநீர் தேங்கி இருந்தது.
அயனாவரம் நூர்ஓட்டல் பஸ் நிறுத்தத்தில் இருந்து சிக்னல் வரை சுமார் 100 மீட்டர் தூரத்திற்கு தண்ணீர் தேங்கி நின்றதால் வாகன ஓட்டிகள் கடும் அவதி அடைந்தனர். அயனாவரம் இ.எஸ்.ஐ.அரசு ஆஸ்பத்திரி அருகே தண்ணீர் செல்ல வழியின்றி குளம்போல் தேங்கி நிற்கிறது.
புரசைவாக்கம் பழைய மோட்சம் தியேட்டர் அருகே முழங்கால் அளவுக்கு தண்ணீர் தேங்கி உள்ளது. மழை நீருடன் கழிவுநீரும் சேர்ந்து துர்நாற்றம் வீசுகிறது. இதனால் தண்ணீரில் நடந்து செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. வாகனங்களும் மெதுவாக ஊர்ந்து சென்றன.
அழகப்பா சாலையில் தாஷப்பிரகாஷ் பஸ் நிறுத் தம் அருகே சாலையே தெரி யாத அளவுக்கு மழைநீர் தேங்கி நின்றது. கழிவுநீரும் சேர்ந்து உள்ளதால் கருப்பு நிறமாக காட்சி அளிக்கிறது. இதனால் பஸ்நிறுத்தத்தில் இறங்கி செல்லும் பயணிகள் கடும் அவதி அடைந்தனர்.
அண்ணாநகர் அண்ணா ஆர்ச் அருகே அரசு சித்த மருத்துவமனை நுழைவு வாயிலில் தேங்கி இருந்த மழைநீரை கடந்து செல்வதற்கு நோயாளிகள் மிகவும் சிரமப்பட்டனர். கிண்டி, நுங்கம்பாக்கம் ரெயில் நிலையங்களை சுற்றி உள்ள பகுதிகளும் மழை நீரால் சூழ்ந்திருந்தன.
தி.நகரில் உள்ள தமிழ்நாடு திரைப்பட தொழிலாளர்கள் நலச்சங்க கட்டிட பகுதியிலும், தி.நகர் பஸ் நிலயத்தை சுற்றியுள்ள பகுதிகளிலும் தேங்கிய மழை நீரால் பொது மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டனர்.
பெரியமேடு, வேப்பேரி, கீழ்ப்பாக்கம் ஆம்ஸ்ரோடு, மயிலாப்பூர், கோட்டூர்புரம், அண்ணாசாலை, ஆயிரம் விளக்கு, திருவல்லிக்கேணி, ஐஸ்அவுஸ் உள்ளிட்ட இடங்களிலும் தேங்கிய மழைநீரில் சிக்கி மோட்டார் சைக்கிள்கள் பழுதானது.
ராயபுரம், ஆட்டுத தொட்டி, பழைய வண்ணா ரப்பேட்டை, தண்டையார் பேட்டை ஸ்டான்லி நகர், வண்ணாரப்பேட்டை போஜராஜன் தெரு, கேணியம்மன் நகர், திரு வொற்றியூர், மணலி, மாதவரம், வடபெரும்பாக்கம் போன்ற இடங்களிலும் சாலையில் தேங்கிய மழை நீரில் கார்கள், மோட்டார் சைக்கிள்கள் உள்ளிட்ட வாகனங்கள் மெதுவாக சென்றதை காண முடிந்தது.
50-க்கும் மேற்பட்ட சாலைகளில் குளம் போல மழைநீர் தேங்கியது.
இன்று அதிகாலையில் வீசிய சூறைக்காற்றில் சென்னை மாநகரில் 3 இடங்களில் மரங்கள் சாய்ந்தன. தி.நகர் பர்கிட் சாலையில் பெரிய மரம் ஒன்று வேரோடு சாய்ந்தது.
அருகில் இருந்த வீட்டின் மீது விழுந்தது. இதையடுத்து தீயணைப்பு வீரர்கள் அங்கு விரைந்து சென்று மரத்தை வெட்டி அகற்றினார்கள்.
சூளைமேடு நெல்சன் மாணிக்கம் ரோடு, நுங்கம்பாக்கம் வீரபத்திரன் தெரு ஆகிய இடங்களிலும் மரங்கள் சாய்ந்தன. இந்த மரங்களையும் தீயணைப்பு வீரர்கள் மற்றும் போலீஸ் பேரிடர் மீட்பு குழுவினர் ஆகியோர் வெட்டி அப்புறப் படுத்தினார்கள்.
இதன் காரணமாக இந்த 3 சாலைகளிலும் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. மரங்கள் அகற்றப்பட்ட பின்னர் சாலையில் போக்குவரத்து சீரானது.
சென்னையில் நேற்று இரவு பெய்த மழையால் சுரங்க பாதைகளிலும் தண்ணீர் தேங்கியது. இதில் சேத்துப்பட்டு, பெரம்பூர், சுரங்கப் பாதைகளில் தேங்கிய தண்ணீரால் வாகன ஓட்டிகள் மாற்று பாதையில் திருப்பி விடப்பட்டனர்.
20-க்கும் மேற்பட்ட சுரங்கப் பாதைகளில் தேங்கிய மழைநீர் வெளியேற்றப் பட்டிருந்தது. பெரம்பூர், சேத்துப்பட்டு சுரங்கப்பாதைகளிலும் மழைநீரை வெளியேற்றும் பணி நடந்து வருகிறது.
இதேபோன்று தாம்பரம், ஆவடி சுற்று வட்டாரப் பகுதிகளிலும் பெய்த மழையால் தாழ்வான பகுதிகளில் வசித்த மக்கள் கடும் பாதிப்புக்குள்ளானார்கள்.
நாளையும் மழை நீடிக்கும் என் தெரிவிக்கப்பட்டுள்ளதால் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் அனைத்து துறைகளை சேர்ந்த அதிகாரிகளும் முழு வீச்சில் களம் இறங்கியுள்ளனர்.

விஜய் Vijay DMK சென்னை Chennai திமுக TVK தவெக அண்ணாமலை Annamalai அதிமுக பாஜக கனமழை BJP Tamil Nadu தமிழக வெற்றிக் கழகம் TTV Dhinakaran எடப்பாடி பழனிசாமி MK Stalin AIADMK ADMK திருமாவளவன் மு.க.ஸ்டாலின் AMMK அன்புமணி ராமதாஸ் Anbumani Ramadoss தமிழ்நாடு டிடிவி தினகரன் சீமான் Thirumavalavan முக ஸ்டாலின் செங்கோட்டையன் Seeman Sengottaiyan PMK வடகிழக்கு பருவமழை பாமக சட்டசபை தேர்தல் Edappadi Palaniswami Tamilaga Vettri Kazhagam வானிலை ஆய்வு மையம் Congress