காவல்துறை விசாரணையில் உயிரிழந்த கோயில் காவலாளி அஜித்குமார் மீது நகை திருட்டு புகார் அளித்திருந்த பேராசிரியர் நிகிதா பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை உடன் இருப்பது போன்ற புகைப்படங்கள் சோசியல் மீடியாவில் வைரலானது. ஆனால் அந்த புகைப்படத்தில் இருப்பவர் பேராசிரியர் நிகிதா இல்லை என்ற உண்மை தற்போது தெரிய வந்துள்ளது. அந்த புகைப்படத்தில் இருப்பவர் யார் என்ற உண்மையும் வெளிவந்துள்ளது.
சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் காளி கோவில் காவலாளி அஜித் குமார் உயிரிழப்பு சம்பவம் தமிழக போலீசாரின் அத்துமீறிய நடவடிக்கைகளை கேள்விக்கு உள்ளாக்கியுள்ளது. தமிழ்நாடு முழுவதும் காவல்துறை அதிகாரப் போக்குக்கு எதிரான குரல்கள் எழத் தொடங்கியுள்ளன. இதுதொடர்பாக வழக்கு நடந்து வரும் நிலையில் சம்பந்தப்பட்ட காவலர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதுடன், கொலை வழக்கில் கைதும் செய்யப்பட்டுள்ளனர்.
இந்த விவகாரத்தில் நகை காணாமல் போனதாக கூறப்பட்ட ஆதாரமற்ற குற்றச்சாட்டு தான் தற்போது அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. 10 சவரன்நகைகளை திருடி விட்டதாக நிகிதா என்பவர் கொடுத்த புகார் எந்த அளவுக்கு உண்மையானது என்ற கேள்விக்கணைகளும் எழ ஆரம்பித்துள்ளது. இவர் மீது, அரசு வேலை வாங்கித் தருகிறேன் என ஆசை காட்டி லட்சக்கணக்கில் மோசடி செய்த பல்வேறு புகார்கள் பதிவு செய்யப்பட்டிருப்பதும் அடுத்தடுத்து அம்பலமாகி வருகிறது.
இந்நிலையில், நிகிதாவின் முன்னாள் கணவர் திருமாறன் அவர் திருமண மோசடி செய்யும் பெண் என குற்றம்சாட்டியிருந்தார். தனக்கும், நிகிதாவுக்கு கடந்த 2004ம் ஆண்டு திருமணம் நடைபெற்றதாகவும், கல்யாணமாகிய முதல் இரவு அன்றே அவர் ஓடிவிட்டார் என்றும் தனக்கு முன்பே அவர் 3 திருமண மோசடிகளில் ஈடுபட்டிருப்பதாகவும் ஆதங்கத்துடன் குறிப்பிட்டார்.
பேராசிரியர் நிகிதா மீது அடுக்கடுக்கான புகார்கள் வெளிவந்து கொண்டிருக்கின்றன. இதனிடையே பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை உடன் நிகிதா இருக்கும் புகைப்படம் ஒன்று பேஸ்புக்கில் வெளியானது. இந்த புகைப்படம் வெளியான நிலையில் அண்ணாமலை மீது பலர் விமர்சனங்களை முன்வைத்தனர். ஆனால் அந்த புகைப்படத்தில் இருப்பவர் நிகிதா இல்லை என்பது தற்போது தெரியவந்துள்ளது.
சமூக வலைதளங்களில் வைரலாகும் புகைப்படத்தில் இருப்பவர் திரூவள்ளூர் கிழக்கு மாவட்ட பாஜக செயலாளர் ராஜினி. அண்ணாமலை தான் எடுத்து கொண்ட புகைப்படத்தை சிலர் நிகிதா என்று பகிர்ந்து வருவதாக பொன்னேரி காவல்நிலையத்தில் புகார் கூறி உள்ளார். இதன் மூலம் அண்ணாமலை உடன் இருப்பவர் நிகிதா இல்லை என்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
திரூவள்ளூர் கிழக்கு மாவட்ட செயலாளர் ராஜினி ஃபேஸ்புக்கில் பதிவிட்டுள்ள பதிவு
மேலும் இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள
E7 Tamil Whatsapp Channel-ஐ Follow பண்ணுங்க
Whatsapp Channel Link:-
https://whatsapp.com/channel/0029Va9LGy4FXUuiUvhKXV1S