ஐசிசி 2024 டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் ரோஹித் சர்மா தலைமையிலான இந்தியா சூப்பர் 8 சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளது. இந்த தொடரில் தங்களுடைய முதல் போட்டியில் அயர்லாந்தை வீழ்த்திய இந்தியா 2வது போட்டியில் பாகிஸ்தானை வீழ்த்தியது. அதைத் தொடர்ந்து 3வது போட்டியில் அமெரிக்காவை அதனுடைய சொந்த மண்ணில் வீழ்த்திய இந்தியா குரூப் ஏ பிரிவில் முதலிடம் பிடித்துள்ளது.
இருப்பினும் இந்தத் தொடரில் நம்பிக்கை நட்சத்திரம் விராட் கோலி 1, 4, 0 ரன்களில் அவுட்டானது ரசிகர்களுக்கு ஏமாற்றத்தை கொடுத்தது. கடந்த உலகக் கோப்பைகளில் 3வது இடத்தில் களமிறங்கி அதிக ரன்கள் அடித்த வீரராக உலக சாதனை படைத்துள்ள அவர் 2 தொடர்நாயகன் விருதுகளை வென்றுள்ளார். ஆனால் இந்த உலகக் கோப்பையில் அவர் துவக்க வீரராக விளையாடி வருகிறார்.
குறிப்பாக ஐபிஎல் 2024 தொடரில் ஆர்சிபி அணிக்காக துவக்க வீரராக விளையாடிய விராட் கோலி ஆரஞ்சு தொப்பியை வென்றார். அதனால் இந்த உலகக் கோப்பையில் இந்திய அணி நிர்வாகம் அவரை துவக்க வீரராக களமிறக்கியுள்ளது. ஆனால் அந்த முடிவு இதுவரை இந்திய அணிக்கு மிகப்பெரிய பாதகமாக அமைந்துள்ளது. அதனால் அவரை 3வது இடத்தில் மீண்டும் களமிறக்க வேண்டும் என்று கோரிக்கைகள் எழுந்துள்ள.
இந்நிலையில் விராட் கோலி – ரோஹித் சர்மா ஆகியோர் தொடர்ந்து துவக்க வீரர்களாக களமிறங்க வேண்டும் என்று வெஸ்ட் இண்டீஸ் ஜாம்பவான் பிரைன் லாரா தெரிவித்துள்ளார். ஏனெனில் விராட் கோலி சுமாராக விளையாடினாலும் இந்தியா இதுவரை வெற்றி கண்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். எனவே வெற்றி நடை போடும் அணியில் மாற்றத்தை செய்யக்கூடாது என்று தெரிவிக்கும் அவர் இது பற்றி பேசியது பின்வருமாறு.
“ஓப்பனிங் பார்ட்னர்ஷிப்பில் இடது வலது கை பேட்ஸ்மேன்களை பயன்படுத்தும் வாய்ப்பு இந்தியாவுக்கு இருக்கிறது. இம்முறை அங்கே அவர்கள் 2 மகத்தான வீரர்களை பயன்படுத்தியுள்ளனர். இந்தியாவுக்காகவும் ஐபிஎல் தொடரிலும் சிறப்பாக விளையாடிய ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலி ஆகியோரை அவர்கள் களமிறக்கியுள்ளனர். ஆனால் நீங்கள் சொல்வது போல் விராட் கோலி கொஞ்சம் கீழே வந்தால் அது அப்சட்டை ஏற்படுத்தும்”
“தற்போது கொண்டுள்ள இதே கலவைக்கு அந்த 2 வீரர்களுக்கும் இந்தியா ஆதரவு கொடுக்க வேண்டும் என்று நான் நம்புகிறேன். ஏனெனில் இந்த தொடரில் ஏதோ ஒரு தருணத்தில் பேட்டிங்க்கு சாதகமான சூழ்நிலைகள் வரும். அமெரிக்காவில் அது மிகவும் கடினமாக இருக்கிறது. எனவே நீங்கள் வெற்றி பெறும் போது மாற்றம் செய்ய வேண்டும் என்று நான் நம்பவில்லை” எனக் கூறினார்.