எடப்பாடி தொகுதியில் சுயேச்சைக்கு விஜய் ஆதரவு! யார் இவர்?
எடப்பாடி தொகுதியில் சுயேச்சை வேட்பாளர் கூ. பிரேம்குமாருக்கு தவெக தலைவர் விஜய் ஆதரவு தெரிவித்துள்ளார்.இது தொடர்பாக தவெக தலைவர் விஜய் தன்னுடைய எக்ஸ் தளப் பதிவில், ”எடப்பாடி சட்டமன்றத் தொகுதியில் சுயேச்சை வேட்பாளராகப் போட்டியிடும் கூ. பிரேம்குமார், முன்பே நமது ரசிகர் மன்றத்தில் நிர்வாகியாகப் பயணித்தவர்தான். நம்முடைய சகோதரர்தான்.
எனவே, தற்போதைய சட்டமன்றத் தேர்தலில் வேட்பாளராகப் போட்டியிடும் நமது முன்னாள் நிர்வாகியான கூ. பிரேம்குமாருக்கு அவருக்கு ஒதுக்கப்பட்டுள்ள தொலைக்காட்சிப் பெட்டி சின்னத்தையும் நமது தமிழக வெற்றிக் கழகம் சார்பாக ஒருமனதாக ஆதரிக்க முடிவு செய்துள்ளோம் என்பதைத் தெரிவித்துக்கொள்கிறேன். நமது முழு ஆதரவுடன் களம் காணும் நம் சகோதரர் கூ. பிரேம்குமாரை, மனத்தளவில் நம்முடைய வேட்பாளராகக் கருதி, அவருக்குத் தேர்தல் ஆணையத்தால் அளிக்கப்பட்டுள்ள வரிசை எண் 12-இல் தொலைக்காட்சிப் பெட்டி சின்னத்தில் வாக்களிக்க வேண்டுகிறேன்.
நம் குடும்பத்தைச் சேர்ந்த அவரைப் பெருவாரியான வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறச் செய்யுமாறு தவெக நிர்வாகிகளையும் தோழர்களையும் எடப்பாடி தொகுதி மக்களையும் அன்புடன் கேட்டுக்கொள்கிறேன். எடப்பாடி தொகுதியில் தமிழக வெற்றிக் கழகத்தின் சின்னத்தை முடக்கி, குறுக்கு வழியில் வெற்றியடைய முயன்றவர்களுக்குச் சரியான பாடத்தைப் புகட்டும் விதத்தில் இவரது வெற்றி அமையட்டும்” என்று குறிப்பிட்டுள்ளார்.
எடப்பாடி தொகுதி தவெக வேட்பாளர் அருண் குமார், வேட்பு மனுவை முழுமையாக பூர்த்தி செய்யாத நிலையிலும், வேட்பு மனு பரிசீலனையின்போது நேரில் வராததாலும் அவரது வேட்பு மனு நிராகரிக்கப்பட்டது. மாற்று வேட்பாளர் நித்யாவின் வேட்பு மனுவும் 10 பரிந்துரைகளுக்கு பதிலாக வெறும் 7 பரிந்துரைகள் மட்டுமே இருந்ததால் நிராகரிக்கப்பட்டது. இதனால் தவெக 233 தொகுதிகளில் போட்டியிடும் நிலை உருவாகியுள்ளது.இந்த நிலையில், சுயேச்சை வேட்பாளர் கூ. பிரேம்குமாருக்கு ஆதரவு தெரிவித்துள்ளார் தவெக தலைவர் விஜய்.
வாட்ஸ்அப் சேனலில் உடனுக்குடன் செய்திகளைப் பெறுக!
Join WhatsApp Channel