தூத்துக்குடி: வி.ஏ.ஓ. வீட்டிற்குள் நுழைந்து குழந்தையை கடத்த முயன்ற பெண் கைது
தூத்துக்குடி,
தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளம் ஓடக்கரை தெருவைச் சேர்ந்தவர் சுபாஷ். இவர் அரசூர் 1-ம் கிராமத்தில் கிராம நிர்வாக அலுவலராக பணியாற்றி வருகிறார். நேற்று முன்தினம் மதியம் சுபாஷ் வீட்டில் இருந்தபோது சுமார் 45 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் திடீரென வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்துள்ளார்.
அவர் சுபாஷின் மனைவியின் கழுத்தை நெரித்து, அவர் அணிந்திருந்த தங்க நகையைப் பறிக்க முயன்றார்.
இதனால் அதிர்ச்சியடைந்த சுபாஷின் மனைவி கூச்சலிடவே, அருகிலிருந்த உறவினர்கள் ஓடி வந்தனர். உறவினர்கள் வருவதைக் கண்ட அந்த பெண், தப்பிக்கும் முயற்சியில் அங்கிருந்த சுபாஷின் 3 வயது பெண் குழந்தையைத் தூக்கிக்கொண்டு மின்னல் வேகத்தில் ஓட முயன்றார்.
உடனே சுபாஷ் மற்றும் அவரது உறவினர்கள் அந்த பெண்ணை மறித்து, குழந்தையைப் பத்திரமாக மீட்டனர். அப்போது அந்த பெண் தன்னைத் தடுக்க முயன்றவர்களை தாக்கியதாக கூறப்படுகிறது. சத்தம் கேட்டு ஓடி வந்த அக்கம்பக்கத்தினர் அந்த பெண்ணை சுற்றி வளைத்து பிடித்து சாத்தான்குளம் போலீசாரிடம் ஒப்படைத்தனர்.
பிடிபட்ட பெண் மீது புகார் அளித்தும் போலீசார் நடவடிக்கை எடுக்க தாமதம் செய்ததாக கூறி, சுபாஷின் உறவினர்கள் மற்றும் ஊர் பொதுமக்கள் சாத்தான்குளம் காவல் நிலையத்தில் திரண்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து, சாத்தான்குளம் டி.எஸ்.பி. ஆவுடையப்பன் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி, உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தார்.
பிடிபட்ட பெண்ணிடம் போலீசார் நடத்திய விசாரணையில், அவர் தூத்துக்குடி பூபாலராயபுரம் பகுதியைச் சேர்ந்த மாரியம்மாள் என்பதும், கடந்த ஒரு மாதமாக மேல சாத்தான்குளம் பகுதியில் வசித்து வருவதும் தெரியவந்தது. மேலும் சம்பவத்தின் போது அவர் மதுபோதையில் இருந்ததும் உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து மாரியம்மாளை கைது செய்தனர்.
வாட்ஸ்அப் சேனலில் உடனுக்குடன் செய்திகளைப் பெறுக!
Join WhatsApp Channel