வருடாந்திர பிரம்மோற்சவ விழா - திருப்பதியில் நாளை கருட சேவை
திருப்பதி ஏழுமலையான் கோவில் வருடாந்திர பிரம்மோற்சவ விழாவின் 3-வது நாளான நேற்று இரவு ஸ்ரீதேவி, பூதேவி சமேதராய் ஏழுமலையான் 4 மாட வீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.
இன்று காலை கல்ப விருட்ச வாகனத்தில் எழுந்தருளினார். மாட வீதிகளில் பக்தர்கள் கோவிந்தா கோஷத்துடன் சாமி தரிசனம் செய்தனர். இன்று இரவு சர்வ பூபால வாகன உற்சவம் நடக்கிறது.
பிரம்மோற்சவ விழாவில் முக்கிய நிகழ்வான தங்க கருட வாகன சேவை நாளை நடைபெறுகிறது. மாலை 6.30 மணி முதல் நள்ளிரவு வரை கருட சேவை நடைபெறும்.
கருட சேவையைக் காண லட்சக்கணக்கான பக்தர்கள் திருப்பதி மலைக்கு வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. கருட சேவையை முன்னிட்டு ஆந்திரா பிரதேச போக்குவரத்து துறை சார்பில் கூடுதலாக பஸ்கள் இயக்கப்பட உள்ளன. கருட சேவையை காண காலை முதலே பக்தர்கள் மாட வீதிகளில் குவிவார்கள்.
பக்தர்களின் வசதிக்காக மாட வீதிகளின் நுழைவு வாயிலில் சிறப்பு வழிகாட்டி பலகைகள் பொருத்தப்பட்டு உள்ளன. பக்தர்களின் கூட்டத்தை கட்டுப்படுத்தவும், கண்காணிக்கவும் பல மடங்கு பாதுகாப்பு ஏற்படுத்தப்பட்டு உள்ளது.
திருப்பதியில் நேற்று 68,265 பேர் தரிசனம் செய்தனர். 26,959 பக்தர்கள் முடி காணிக்கை செலுத்தினர்.ரூ.4.16 கோடி உண்டியல் காணிக்கை வசூலானது.
3.21 லட்சம் லட்டுக்கள் விற்பனையானது.நேரடி இலவச தரிசனத்தில் வந்த பக்தர்கள் 15 மணி நேரம் காத்திருந்து தரிசனம் செய்தனர்.
வாட்ஸ்அப் சேனலில் உடனுக்குடன் செய்திகளைப் பெறுக!
Join WhatsApp Channel